மும்பை: ஏ.டி.எம். எந்திரங்களில் மாதம் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.20 கூடுதல் கட்டணம் வசூலிக்கும் விதிமுறையை முதல் ஆளாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா(எஸ்.பி.ஐ.) அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை, பெங்களூர், மும்பை உள்ளிட்ட 6 மெட்ரோக்களில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் மாதம் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் வங்கிகள் கூடுதல் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என்று மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இதையடுத்து நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் இந்த புதிய கட்டணம் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா(எஸ்.பி.ஐ.) தான் இந்த புதிய கட்டணத்தை முதல் ஆளாக அறிமுகப்படுத்தியுள்ளது.
எஸ்.பி.ஐ.
எஸ்.பி.ஐ. வங்கி கணக்கி வைத்திருப்பவர்கள் வேறு வங்கி ஏ.டி.எம்.களில் மாதம் மூன்று முறைக்கு பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் கூடுதலாக ரூ.20 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.பி.ஐ-இல் கணக்கு வைத்திருப்பவர்கள் அதன் ஏடிஎம்மில் மாதம் 5 முறை இலவசமாக பணம் எடுக்கலாம்.
ரூ.25,000
எஸ்.பி.ஐ. கணக்கில் ரூ. 25 ஆயிரம் அல்லது அதற்கு மேல் இருப்பு வைத்திருப்பவர்கள் அதன் ஏடிஎம்களில் எத்தனை முறை வேண்டுமானாலும் இலவசமாக பணம் எடுக்கலாம். அதே சமயம் எஸ்.பி.ஐ.-இல் ரூ.1 லட்சம் இருப்பு வைத்திருப்பவர்கள் எந்த வங்கி ஏடிஎம்களில் வேண்டுமானாலும் எத்தனை முறையும் இலவசமாக பணம் எடுக்கலாம்.
ஹெச்.டி.எப்.சி.
ஹெச்.டி.எப்.சி. வங்கி டிசம்பர் 1ம் தேதியில் இருந்து இந்த புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்துகிறது. ஹெச்.டி.எப்.சி. வாடிக்கையாளர்கள் அதன் ஏடிஎம்மில் மாதம் 5 முறை இலவசமாக பணம் எடுக்கலாம். பணம் இருப்பு, மினி ஸ்டேட்மென்ட் பார்க்க ரூ.8.5 கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆக்சிஸ்
ஆக்சிஸ் வங்கியும் வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதியில் இருந்து புதிய கட்டணத்தை அமல்படுத்துகிறது. ஆக்சிஸ் வங்கியில் கணக்கு மற்றும் சம்பள கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ.1 லட்சம் இருப்பு வைத்திருந்தால் மாதம் 10 முறை இலவசமாக ஏடிஎம்களில் பணம் எடுக்கலாம்.