டெல்லி: நாட்டிலுள்ள கோடிக்கணக்கான அரசு மற்றும் பொதுத் துறை நிறுவன ஓய்வூதியதாரர்களுக்கு உதவும் வகையில் ஜீவன் பிரமான் என்ற திட்டத்தை பிரதமர் மோடி டெல்லியில் நேற்று அறிமுகப்படுத்தினார்.
இதன்படி ஓய்வூதியதாரர்கள் தாங்கள் உயிருடன் இருப்பதை மின்னணுச் சான்று வழியாக அரசுக்கு உறுதிப்படுத்தும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. தற்போது ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் அரசு அலுவலகங்களில் நேரில் ஆஜராகி தங்கள் இருப்பை பதிவு செய்வது கட்டாயமாக உள்ளது.
முதியவர்கள் இதனால் சிரமப்பட்ட நிலையில் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆதார் எண் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படும். மத்திய மின்னணு அமைச்சகம் உருவாக்கியுள்ள சிறப்பு மென்பொருள் ஓய்வூதியதாரர்களின் ஸ்மார்ட் போனுக்கு அனுப்பப்படும்.
இதில் ஓய்வூதியதாரர்களால் பயோமெட்ரிக் முறையில் பதியப்படும் கருவிழி அல்லது கை ரேகைகள் மத்திய அரசின் தகவல் தொகுப்புக்கு அனுப்பப்பட்டு அவரது இருப்பு உறுதி செய்யப்படும். இதற்கான மென்பொருள் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை ஓய்வூதியதாரர்களுக்கு இலவசமாக தரவும் அரசு திட்டமிட்டுள்ளது.