நாபிடா: இந்தியாவில் தொழில் துவங்க வருமாறு மலேசிய நிறுவனங்களுக்கு பிரமதர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி மியான்மர் சென்றுள்ளார். அங்கு அவர் மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக்கை சந்தித்து பேசினார். அப்போது அவர் நஜீபிடம் கூறுகையில், கடந்த காலங்களில் இந்தியாவும், மலேசியாவும் ஒன்றாக சேர்ந்து பணிபுரிந்துள்ளது. இந்த உறவை நாம் மேலும் மேம்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.
அந்த சந்திப்பிற்கு பிறகு மோடி கூறுகையில்,
மேக் இன் இந்தியா திட்டத்திற்கு நான் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறேன். இந்தியாவில் தொழில் துவங்க வருமாறு மலேசிய நிறுவனங்களை அழைக்க விரும்புகிறேன். இந்தியாவில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்றார்.
ஜப்பான், தென் கொரியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்க ஆகிய நாடுகளில் இருந்து வரும் முதலீடுகளை இந்தியா நம்பி உள்ளது. வரும் 2022ம் ஆண்டுக்குள் அனைத்து இந்தியர்களுக்கும் சொந்தமாக வீடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறார் மோடி. மலேசியா வீடு கட்டும் தொழிலில் சிறப்பாக செயல்படுகிறது. இதனால் இந்தியாவிலும் வீடு கட்டும் துறையில் மலேசிய நிறுவனங்கள் ஈடுபடலாம் என்று மோடி தெரிவித்துள்ளார்.