டெல்லி: புத்தாண்டையொட்டி ஏர் ஏசியா இந்தியா நிறுவனம் சலுகை விலையில் அதாவது ரூ.999க்கு விமான டிக்கெட்டுகளை வழங்குகிறது.
தற்போது விமான நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர மிகக் குறைந்த விலையில் பயண டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருகின்றன. இந்நிலையில் ஏர் ஏசியா இந்தியா நிறுவனம் புத்தாண்டையொட்டி ரூ.999க்கு விமான டிக்கெட் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இந்த சலுகை விலை டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு வரும் 23ம் தேதியுடன் முடிகிறது. சலுகை விலை டிக்கெட்டில் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை எப்பொழுது வேண்டுமானாலும் பயணம் செய்யலாம்.
ஏர் ஏசியா போன்று இன்டிகோ நிறுவனமும் சலுகை விலை டிக்கெட்டுக்கள் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்டிகோ விமான டிக்கெட்டுகள் ரூ.1, 647ல் இருந்து கிடைக்கும். பயணம் செய்வதற்கு 90 நாட்களுக்கு முன்பு இந்த சலுகை விலை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும். இந்த சலுகை குறிப்பிட்ட இடங்களுக்குமே மட்டுமே.
இன்டிகோ தனது போட்டி நிறுவனமான ஜெட்ஏர்வேஸ் ரூ.1,973க்கு சலுகை விலை டிக்கெட்டை அறிவித்ததை பார்த்து தானும் டிக்கெட்டுகளை சலுகையில் விலையில் அளிக்கிறது. ஜெட் ஏர்வேஸின் சலுகை எக்கானமி கிளாஸில் இந்தியாவுக்குள் பயணம் செய்தால் மட்டுமே செல்லுபடியாகும்.
ஜெட் ஏர்வேஸின் சலுகை விலை டிக்கெட்டை பயணம் செய்வதற்கு 90 நாட்களுக்கு முன்பே பெற வேண்டும். மேலும் வரும் மார்ச் மாதம் 31ம் தேதி வரை இந்த சலுகை அமலில் இருக்கும்.
விமான நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சலுகை விலையில் டிக்கெட் அளிப்பதால் விமான பயணம் செய்வோரின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் உள்நாட்டில் விமான பயணம் செய்தோரின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.