டெல்லி: அரசு உயர் அதிகாரிகள் முதல் வகுப்பில் பயணம் செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளதையடுத்து அமெரிக்காவுக்கு செல்லும் விமானங்களில் முதல் வகுப்பு இருக்கைகளை நீக்க ஏர் இந்தியா ஆலோசித்து வருகிறது.
அரசு உயர் அதிகாரிகள் முதல் வகுப்பில் பயணம் செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஏர் இந்தியாவில் பெரும்பாலும் முதல் வகுப்பில் பயணம் செய்வது அரசு உயர் அதிகாரிகள் என்பதால் மத்திய அரசின் இந்த முடிவு அந்நிறுவனத்தை கவலை அடைய வைத்துள்ளது.
முதல் வகுப்பில் ஏற்கனவே 20 முதல் 25 சதவீத இருக்கைகள் தான் ஆக்கிரமிக்கப்படுகின்றன. இந்நிலையில் மத்திய அரசின் இந்த முடிவு எங்களை பெரிதும் பாதிக்கும் என்று ஏர் இந்தியா மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இயக்கப்படும் போயிங் 777-300 இஆர் விமானங்களில் முதல் வகுப்பு இருக்கைகளை வைப்பதா நீக்குவதா என்று யோசனையில் உள்ளது ஏர் இந்தியா.
இது குறித்து ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் கூறுகையில்,
முதல் வகுப்பு இருக்கைகளை நீக்குவது பற்றி போர்டு தான் முடிவு செய்ய வேண்டும். ஏர் இந்தியா ஸ்டார் அலையன்ஸுடன் கைகோர்ப்பதால் பயணிகள் முதல் வகுப்பில் பயணம் செய்ய விரும்பலாம். முதல் வகுப்பில் எத்தனை பேர் பயணம் செய்கிறார்கள் என்பதை அடுத்த 6 முதல் 8 மாதங்கள் வரை பார்த்துவிட்டு தான் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றார்.
இந்திய விமான நிறுவனங்களில் ஏர் இந்தியா மட்டும் தான் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு நான் ஸ்டாப்பாக செல்லும் விமானத்தில் முதல் வகுப்பு அளித்து வருகிறது. இந்நிலையில் முதல் வகுப்பு இருக்கைகளை நீக்கினால் அது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எஸ்டிஐசி டிராவல் குழும தலைவர் சுபாஷ் கோயல் தெரிவித்தார்.