லக்னோ: கார் விபத்தில் இறந்துபோன டிரைவர் குடும்பத்துக்கு ரூபாய் 15 லட்சமும் உரிமையாளர் கௌதம் ஷர்மாவுக்கு ரூபாய் 10 லட்சமும் டொயோட்டா நிறுவனம் நஷ்ட ஈடாக வழங்கியுள்ளது. விபத்தின் போது காரில் காற்றுப்பை இயங்காத காரணத்தால் ரூ. 25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து இதனை வழங்கியுள்ளது டெயோட்டா நிறுவனம்.
2012 ம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் மஹோபா எனும் இடத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஒன்று விபத்துக்குள்ளாகி, கவிழ்ந்து புரண்டது.
தொழில்நுட்ப திட்டமிடலின்படி அந்த வாகனத்தின் காற்றுப் பைகள் விரிவடையாததால், அதன் ஓட்டுநர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். உடன் பயணித்த ஃபார்ச்சூனரின் உரிமையாளர் கௌதம் ஷர்மாவுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.
அவருடைய உடல் நலம் பெற்றதும் இது தொடர்பாக நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் கௌதம் ஷர்மா. இரண்டு ஆண்டுகளுக்குப்பின், 2014 நவம்பரில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
‘‘இந்தியாவின் பாதுகாப்பான கார் என்று விளம்பரம் செய்யப்படும் ஃபார்ச்சூனரில், விபத்தின்போது காற்றுப் பைகள் விரிந்திருக்க வேண்டும். ஆனால், அவை செயல்படாமல் போனதால்தான் 33 வயதான ஓட்டுநர் ஷேர்கார் இறந்துவிட்டார். எனது கட்சிக்காரருக்கும் பலத்த அடி ஏற்பட்டது.
இந்த நஷ்டத்தைக் கருத்தில் கொண்டு, டொயோட்டா உற்பத்தியாளர்கள் நிச்சயம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்!'' என்று கௌதர் ஷர்மாவின் வழக்கறிஞர் வாதிட்டார்.
டொயோட்டா உற்பத்தியாளர்கள் தரப்பில், ‘‘விபத்தின்போது காரின் முன் பகுதியில் அடிபடவில்லை. எனவேதான் காற்றுப் பைகள் செயல்படவில்லை!'' என்று வாதிடப்பட்டது.
டொயோட்டா உற்பத்தியாளர்கள் தரப்பினரின் கருத்தை நீதிமன்றம் ஒப்புக்கொள்ளவில்லை. இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர்,
இறுதியில் தீர்ப்பளித்த நீதிமன்றம், விபத்தில் இறந்துபோன டிரைவர் குடும்பத்துக்கு 15 லட்ச ரூபாய், உரிமையாளர் கௌதம் ஷர்மாவுக்கு 10 லட்ச ரூபாயும் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ஏற்பதாக உச்சநீதிமன்றத்தின் முன் ஒப்புதல் அளித்த டொயோட்டா நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் நஷ்டஈடு அளித்துள்ளது.