சென்னை: வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிக் கொடுக்காதவர்களிடம் இருந்து பணத்தை பெற துப்பறியும் நிபுணர்களின் உதவி பெறப்படுகிறது.
வங்கிகள் தங்களிடம் கடன் வாங்கிவிட்டு அதை திருப்பிக் கொடுக்காதவர்களிடம் இருந்து பணத்தை வசூலிக்க துப்பறியும் நிபுணர்களின் உதவியை நாடி வருகின்றன. இந்தியன் வங்கி உள்ளிட்ட வங்கிகள் துப்பறியும் நிபுணர்களின் உதவியை நாடுகின்றன. கடந்த ஆண்டு மட்டும் இந்தியன் வங்கியில் கடன் வாங்கிவிட்டு ஏமாற்றிய 50 பேரை துப்பறியும் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அதிகார வர்கத்தைச் சேர்ந்த ஒருவர் இரண்டு ஆண்டுகளில் ரூ.300 கோடி கடன் வாங்கிவிட்டு திருப்பிக் கொடுக்கவில்லை. அவர் எங்கு உள்ளார் என்று துப்பறியும் நிபுணர்கள் தேடியபோது தான் அவர் வங்கியில் கடன் வாங்கி அதை வைத்து தனது மகனின் பெயரில் மேலும் ஒரு கம்பெனியை துவங்கியது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் ரூ. 160 கோடியை இதுவரை வங்கி பெற்றுள்ளது. மீதமுள்ள பணத்தை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இது குறித்து சி இன்டெலிஜென்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பி. இளங்கோவன் கூறுகையில்,
கடன் வாங்கியவர்கள் அளித்த ஆவணங்களில் இருக்கும் முகவரிக்கு சென்று அங்கு அக்கம்பக்கத்தினர், ஆட்டோ டிரைவர்களிடம் விசாரிப்போம். அடுத்தபடியாக வாக்காளர் அடையாள அட்டை, பிஎஸ்என்எல் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை சரிபார்ப்போம் என்றார்.
கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதியுடன் நிறைவடைந்த காலிறுதியாண்டில் இனி கிடைக்கவே கிடைக்காது என்று நினைத்த ரூ.55 கோடியை துப்பறியும் நிபுணர்கள் மூலம் வங்கிகள் மீட்டுள்ளன.