டெல் அவிவ்: நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் இஸ்ரேலுடனான இந்தியாவின் வர்த்தக உறவு வலுவடைந்துள்ளது. இஸ்ரேலுடன் 520 மில்லியன் டாலர் மதிப்பிலான மிக முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாகாப்புத் தளவடாங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் கடந்த மாதம் மோடி அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, அமெரிக்கா அதிபர் ஒபாமாவுடன் சந்திப்பை மேற்கொள்வதைவிட இந்திய பிரதமர் மோடியுடனான சந்திப்பைத்தான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தவராக இருந்தார்.

கடந்த மே மாதம் மோடி பிரதமரான பின்னர் பாதுகாப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் இருநாடுகளும் மிகவும் நெருக்கமான உறவை வலுப்படுத்தியுள்ளன. நியூயார்க் சந்திப்புக்குப் பின்னர் அதே மாதத்தில் நீண்டகாலம் நிலுவையில் இருந்த இஸ்ரேலுடனான 520 மில்லியன் டாலர் பாதுகாப்பு தளவாட ஒப்பந்தத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்தது. இஸ்ரேலிடம் இருந்து ஏவுகணைகள் உள்ளிட்டவைகளை வாங்குவதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்யும்.
இஸ்ரேல் ராணுவ தளவாடங்களைக் கொள்முதல் செய்வதில் இந்தியாதான் முதன்மை இடம் வகிக்கிறது. இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் இருதரப்பும் மொத்தம் 3.4 பில்லியன் டாலர் அளவிலான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன.
கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசானது இஸ்ரேலுடன் நெருக்கம் காட்டினால் முஸ்லிம் சமூகம் வருத்தப்படுமோ என்கிற ஊசலாட்டத்துடனான நிலைப்பாட்டை மேற்கொண்டிருந்தது. இதனால் இஸ்ரேலை ஒதுக்கி வைக்கவும் அப்போதைய அரசு தயங்கவில்லை.
ஆனால் 2006 ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்த காலம் முதலே இஸ்ரேலுடனான உறவை அவர் வலுப்படுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications