மும்பை: இந்தியாவின் தனியார் வங்கித்துறையில் உள்ள போட்டியை சமாளிக்க முடியாமல் வங்கி நிறுவனங்கள் தவித்து வருகிறது. இப்போட்டியில் வலிமை இழந்து வரும் ஐஎன்ஜி வைஸ்யா வங்கியை, கோடக் மஹிந்திரா வங்கி முழுமையாக கைபற்றியது. இதன் மூலம் கோடக் மஹிந்திரா வங்கி இந்தியா முழுவதும் தனது வங்கிச் சேவையை இனி எளிமையாக அளிக்க முடியும்.
மேலும் தனியார் வங்கித்துறையில் கோடக் மஹிந்திரா வங்கி டாப் நான்கு இடத்திற்குள் நுழைந்ததுள்ளது. இதுமட்டும் அல்லாமல் இத்துறையில் முதன்மையான ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கிகளுடன் போட்டிப்போடும் அளவிற்கும் உயர்ந்துள்ளது.
பங்கு பரிமாற்றம்
ஐஎன்ஜி வைஸ்யா வங்கியை கைபற்றியதால், இந்நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு கோடக் மஹிந்திரா வங்கி நிர்வாகம் 1000 பங்குகளுக்கு 725 கோடக் மஹிந்திரா வங்கி பங்குகளை அளிக்க திட்டமிட்டுள்ளது.
கைபற்றுதல்
இவ்வங்கியை, கோடக் மஹிந்திரா வங்கி குழுமம் புத்தக மதிப்பிற்கு இரண்டு மடங்கு அதிகமான தொகைக்கு கைபற்றியது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதற்குமுன் சில வங்கி நிறுவனங்களை பெரும் நிறுவனங்கள் 6 மடங்கு தொகைக்கும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடதக்கது.
விரிவாக்கம்
இவ்வங்கி கைபற்றுதலின் மூலம் கோடக் மஹிந்திரா வங்கி இந்தியாவில் தனது கிளைகளை இரட்டிப்பாக்க முடியும். இதுநாள் வரை இவ்வங்கி 641 கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது, இத்துடன் இனி ஐஎன்ஜி வைஸ்யா வங்கியின் 573 கிளைகளும் இணைய உள்ளது.
இந்தியா முழுவதும்
கோடக் மஹிந்திரா வங்கி இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதேபோல் வைஸ்யா வங்கி தென் இந்தியாவில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இந்தியா முழுவதும் சிறப்பாக கோடக் செயல்பட உள்ளது.