டெல்லி: உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 5 ஆண்டு சரிவையை தழுவி, ஒரு பீப்பாய் எண்ணெய் 61.12 டாலர் என்ற விலையை எட்டியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை பெருமளவில் குறைய வாய்ப்புகள் உள்ளது. மேலும் கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் கச்சா எண்ணெயின் விலை 60 டாலர் என்ற அளவில் குறைந்து வர்த்தகம் செய்யப்பட்டது.
கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்ததால் வளரும் நாடுகளின் வர்த்தக சந்தை கடுமையாக பாதிக்கும் என கருத்து நிலவி வருகிறது. மேலும் சவுதி அரபிய நாடுகள் எண்ணெய் உற்பத்தியை குறைக்கும் எண்ணத்திற்கு இணைங்கவில்லை. எனவே எண்ணெய் வர்த்தகத்தின் மூலம் டாலர் வர்த்தகத்தின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது, இதனால் ரூபாய் மதிப்பு கணிசமான அளவில் குறைந்துள்ளது.
கச்சா எண்ணெய்
உலக நாடுகளின் வர்த்தகத்தில் கச்சா எண்ணெயின் வர்த்தகம் கடுமையான பாதிப்பை உருவாக்கியுள்ளது. இதில் இந்திய சந்தைக்கு பலத்த அடி என்றே சொல்லலாம். எப்படி??
இந்திய சந்தை
எண்ணெயின் விலை குறைந்ததால், உலக நாடுகள் அனைத்தும் எண்ணெய் வளத்தில் முதலீடு செய்ய துவங்கியுள்ளனர், இதன் மூலம் இந்திய சந்தையில் அன்னிய முதலீட்டின் அளவு அதிகளவில் குறைந்துள்ளது. இதன் எதிரொலி கடந்த வாரத்தின் அன்னிய முதலீட்டின் அளவே சான்று.
உந்து சக்தி
இன்றைய நாளில் ஒருநாட்டின் உந்து சக்தியாக விளங்குவது, எண்ணெய் வளம் மற்றும் மின்சாரம் தான். இதனை கருத்தில் கொண்டே உலகின் பல நாடுகள் எண்ணெயின் விலை குறைவாக இருக்கும் போதே இருப்பை அதிகரிக்க துவங்கியுள்ளது.
உற்பத்தி அளவில் மாற்றம்
சவுதி அரபிய நாடுகள் அதிகளவில் எண்ணெய் உற்பத்தி செய்து வருவதால் ரஷ்யா மற்றும் வெனிசுலா நாடுகள் தங்களின் எண்ணெய் உற்பத்தி அளவை ஒரு நாளில் 9 இலட்சம் பேரலாக குறைத்துள்ளது.
விலை சரிவு
மேலும் பிரென்ட் குருட் எண்ணெயின் விலை கடந்த ஜூன் மாதம் உச்சத்தை தொட்டது, தற்போது இதன் விலை 48 சதவீதம் சரிவை எட்டி ஒரு பீப்பாய் எண்ணெய் 60 டாலராக உள்ளது.
மறைமுக பாதிப்பு
கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு குறைந்த அளவிலான வருமானத்தையே கிடைக்கும். இதன் மூலம் நார்வே, சவுதி அரேபியா, அபுதாபி, கத்தார் மற்றும் குவைத் போன்ற நாடுகள் பிற நாட்டு சந்தைகளில் மிகவும் குறைவான அளவிலேயே முதலீடு செய்யும்.
டாலர் ஆதிக்கம்
எண்ணெய் மற்றும் டாலர் வர்த்தகம் அதிகரித்ததால், இந்தியா ரூபாயின் மதிப்பு 62.50 ரூபாய் என்ற அளவில் சரிந்தது. இதன் மூலம் கடந்த 4 நாட்களில் வெறும் 1,850 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளையே வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்றுள்ளது மத்திய அரசு.
இந்திய வர்த்தக சந்தை
எண்ணெய் உற்பத்தியை குறைத்தால் தான் இந்திய சந்தையில் அன்னிய நிறுவனங்களில் முதலீடு அதிகரிக்கும். கடந்த மூன்று வருடங்களாக இந்திய சந்தையில் அன்னிய முதலீட்டின் அளவு தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடதக்கது.