டெல்லி: இந்தியாவில் சாதாரண கார்கள், எஸ்யூவி கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களின் விற்பனையை அதிகரிக்க இரண்டு வருடங்களுக்கு முன்பு கலால் வரியை சுமார் 4 சதவீதம் குறைத்தது, பின்பு அதனை நீட்டித்து கடந்த இரண்டு வருடமாக குறைக்கப்பட்ட வரியை மட்டுமே மத்திய அரசு வசூல் செய்து வருகிறது.
வருகிற ஜனவரி 1 முதல் கலால் வரி குறைப்பை நீட்டிக்க இனியும் முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் வருகிற ஜனவரி 1 முதல் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களின் விலை அதிகரிக்கும்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு எஸ்யூவி கார்களுக்கு கலால் வரி 30% இருந்து 24 சதவீதமாகவும், சாதரண கார்களுக்கு 24% இருந்து 20 சதவீதமாகவும் வரியை குறைத்திருந்தது.
இந்த வரி குறைப்பின் மூலம் ஆட்டோமொபைல் துறையில் விற்பனை சுமார் 10.01 சதவீதம் அதிகரித்தது. மேலும் 2014ஆம் ஆண்டில் சுமார் 1.33 கோடி கார்கள் விற்கப்பட்டது 2013ஆம் ஆண்டில் இதன் அளவு 1.21 கோடி என்ற எண்ணிக்கையில் இருந்தது.
மேலும் கார் தயாரிப்பு நிறுவனங்கள் மத்திய அரசை நாடி வரி குறைப்பை இவ்வருடமும் நீட்டிக்க வலியுறுத்தியும் அரசு ஒப்புக்கொள்ளவில்லை.