மும்பை: உலகளவில் காற்றாலைத் தயாரிப்பில் 5வது மிகப்பெரிய நிறுவனமான சுஸ்லான் குழுமம், ஜெர்மனியில் உள்ள தனது துணை நிறுவனமான சென்வியான் எஸ்ஈ நிறுவனத்தை அமெரிக்காவின் முதலீட்டு நிறுவனமான சென்டர்பிரிட்ஜ் நிறுவனத்திற்கு 1.16 பில்லியன் டாலருக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தங்களும் இரு நிறுவனங்களும் செய்துள்ளது. இந்நிறுவனத்தின் விற்பனைக்குப் பிறகு, வருடத்திற்கு 50 மில்லியன் யூரோ வரையிலான (சுமார் ரூ. 360 கோடி) வருவாய் ஈட்டுவதற்கு வழி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
ஜெர்மனியில் சுஸ்லான்
ஜெர்மனியில் செயல்பட்டு வந்த ஆர்.இ.பவர் நிறுவனத்தை சுஸ்லான் குழுமம் 2009-ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. 2013-ஆம் ஆண்டு இந்நிறுவனம் சென்வியான எஸ்ஈ எனப் பெயர் மாற்றம் பெற்று காற்றாலை மற்றும் டர்பைன் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான திகழ்ந்தது.
நஷ்டத்தில் சுஸ்லான்
கடந்த சில வருடமாக இந்நிறுவனத்தின் டர்பைன் விற்பனை குறைந்ததால் கடுமையான நஷ்டத்தில் இருந்தது சுஸ்லான். இதனால் இந்நிறுவனத்தின் கடன் அளவு 2.68 பில்லியனாக வளர்ந்தது, பின்னர் மறுசீரமைப்பு திட்டங்கள் மூலம் இந்நிறுவனம் 200 மில்லயன் டாலர் அளவு குறைத்து தற்போது 1.8 பில்லயன் டாலர் அளவு கடன் தொகை நிலுவையில் உள்ளது.
விரிவாக்க பணிகள்
இந்த ஒப்பந்தத்தின் மூலம் பெறப்படும் தொகை குழுமத்தின் தற்போதைய கடன் சுமையைக் குறைக்கப் பயன்படுத்தப்படும். மேலும், சுஸ்லானுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்தியா, அமெரிக்கா போன்ற சந்தைகளில் செயல்பாடுகளை விரிவுபடுத்த இத்தொகை பயன்படுத்தப்படும்.
துள்சி டன்டி
சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, துருக்கி, மெக்சிகோவில் வளர்ச்சி பெற்று வரும் சுஸ்லானின் செயல்பாடுகளுக்கு கூடுதல் முதலீடுகள் செய்யவும் இத்தொகை பயன்படும் என்று இந்நிறுவனத்தின் நிறுவனரான துள்சி டன்டி தெரிவித்துள்ளார்.