டோக்கியோ: டிஜிட்டல் உலகின் முன்னணி மொபைல், தொலைகாட்சி, கேமிரா தயாரிப்பு நிறுவனமாக விளங்கிய சோனி தனது மொபைல் விற்பனை குறைந்ததால் நிறுவனத்தின் வருவாய் அதிகளவில் குறைந்தது. இதனை தொடர்ந்து நிறுவனத்தின் வருவாய் நிலையை மேம்படுத்த இந்நிறுவனம் மொபைல் பிரிவில் சுமார் 1,100 பணியாளர்களை நிறுவனத்தை விட்டு நீக்க திட்டமிட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு இந்நிறுவனம் நடப்பு நிதியாண்டில் மொபைல் பிரிவு அல்லாது பிற பிரிவுகளில் 1000 பணியாட்களை நிறுவனத்தை விட்டு நீக்குவதாக அறிவித்தது.
இப்புதிய அறிவிப்பு இந்நிறுவனத்தின் பணியாளர்கள் மத்தியில் கவலையை அளித்துள்ளது. மேலும் ஆட்குறைப்பு பணிகள் அடுத்த சில மாதங்களில் துவங்க உள்ளதாகவும் சோனி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்நிறுவனத்தின் தலைநை நிதியியல் அதிகாரியான கெனிசிரோ யோஷிதா கூறுகையில்,"நிறுவனத்தின் முந்தைய அறிவிப்பான 1,000 பணியாளர்களின் பணி நீக்கத்தை உட்பட தற்போது 2,100 பணியாட்களை நிறுவனத்தை விட்டு வெளியேற்றுவதாக சோனி நிர்வாகம் அறிவித்துள்ளது." என தெரிவித்தார்.
மேலும் இந்நிறுவனம் தனது 2014ஆம் நிதியாண்டின் 3வது காலாண்டு முடிவுகளை அதுவரை வெளியிடவில்லை, அதுக்குறித்து பங்குச்சந்தைக்கு அளித்த கடிதத்தில், நிறுவன சர்வர்களில் ஏற்பட்ட சைபர் ஆட்டாக் காரணமாக இந்நிறுவனத்தின் தகவல்கள் அனைத்தும் அழிந்து விட்டதாகவும் 3ஆம் காலாண்டு முடிவுகளை வெளியிட சில நாட்கள் காலஅவகாசம் தேவை என தெரிவித்துள்ளது.