டெல்லி: வெகு நாட்களாக இந்திய விமான போக்குவரத்து சந்தையில் இல்லாத போட்டி மீண்டும் துவங்கியுள்ளது, இதற்கு முற்றிலும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தான் காரணம். இந்நிறுவனத்தின் அதிரடி விலை சலுகையால் பிற நிறுவனங்களும் சந்தையில் நிலைத்திருக்க இத்தகைய சலுகையை அறிவிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் புதன்கிழமை அறிவித்த காதலர் தின ஆஃபரை எதிர்த்து இண்டிகோ நிறுவனம் அனைத்து கட்டணங்கள் உடன் 1,499 ரூபாய் என்ற சலுகை விலையை அறிவித்துள்ளது.
ஸ்பைஸ்ஜெட் -இண்டிகோ
புதிய நிர்வாக குழுவுடன் செயல்படும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நேற்று அறிவித்த சலுகையை விட 100 ரூபாய் குறைவில், இந்நிறுவனத்திற்கு போட்டியாக இண்டிகோ நிறுவனம் இன்று 1,499 ரூபாய் என்ற புதிய கட்டண சலுகை விலையை அறிவித்துள்ளது.
டெல்லி-ஜெய்பூர்
மேலும் இந்த சலுகை திட்டம் இண்டிகோ நிறுவனத்தின் டெல்லி டூ ஜெய்பூர் வழித்தடத்தில் மட்டுமே அறிவித்துள்ளது. மேலும் இந்நிறுவனத்தில் இச்சலுகை பெற பயணத்திற்கு 90 நாள் முன்னதாக புக்கிங் செய்ய வேண்டும்.
காதலர் தினம்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் காதலர் தினத்திற்காக அறிவித்த சலுகை திட்டம் பிப்ரவரி 6ஆம் தேதி வரை உள்ளது. மேலும் பயணத்தின் நாள் பிப்ரவரி 14 முதல் ஏப்ரல் 15 வரையில் இருக்க வேண்டும் எனவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏர்ஏசியா
டாடா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் மலிவு விலை விமான சேவை வழங்கும் ஏர் ஏசியாவில் 699 ரூபாய் கட்டண சலுகை வருகிற பிப்ரவரி 8ஆம் தேதி வரை உள்ளது. இந்த சலுகையை பெற வாடிக்கையாளர் தங்களின் பயணத்தை ஆகஸ்ட் 3,2015 முதல் மார்ச் 26,2016 வரையில் முடிவு செய்துக்கொள்ளலாம்.
பிற நிறுவனங்கள்
ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ நிறுவனத்தை தவிர ஜெட் ஏர்வேஸ் மற்றும் கோஏர் நிறுவனங்களும் சலுகை விலை கட்டணங்களை அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.
கட்டண சலுகைக்கு என்ன காரணம்
இந்திய விமான போக்குவரத்து துறையில் ஜனவரி முதல் மே மாதம் வரை பயணிகள் எண்ணிக்கை மிகவும் மந்தமாக இருக்கும் இந்த நிலையை போக்கவே இத்தகைய சலுகைகளை அறிவித்து வருகிறது விமான நிறுவனங்கள்.
பயணிகள் எண்ணிக்கை உயர்வு
2014ஆம் ஆண்டில் ஜனவரி முதல் பிப்ரவரி மாதத்தில் விமான பயணிகளின் எண்ணிக்கை சுமார் 9 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.