டெல்லி: நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 26ஆம் தேதி (நாளை) ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் 2015-16ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் முக்கிய திட்டங்கள் குறித்த சில கணிப்புகளை இங்கே பார்போம்.
சோலார் எனர்ஜி
மத்திய அரசின் மிகப்பெரிய கனவு திட்டமாக இருப்பது, நாட்டில் சோலார் மின்சார உற்பத்தியை அதிகரித்து நாட்டின் அனைத்து துறை மற்றும் பகுதிகளிலும் செயல்படுத்துவது தான். இதன் படி முதல் கட்டமாக இத்திட்டத்தை ரயில்வே துறையில் செயல்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேஸ்ட் டூ எனர்ஜி
சோலார் மின்சார திட்டம் மட்டுமல்லாமல் பிளாஸ்டிக் போன்ற கழிவுகள் மூலம் மின்சாரத்தை தயாரிக்கும் திட்டத்தையும் ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிஎன்ஜி
அதேபோல் ரயிலை சிஎன்ஜி எரிவாயு மூலம் செயல்படுத்தும் முறையை முதல் முறையாக இந்தியாவில் செயல்படுத்தும் திட்டத்தையும் ரயில்வே அமைச்சகம் அறிவிக்க உள்ளதாக நம்பப்படுகிறது. இதன் உடன் தண்ணீர் மறுசுழற்சி திட்டத்தையும் செயல்படுத்த உள்ளது.
சுரேஷ் பிரபு
பிப்ரவரி 26ஆம் தேதி ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தனது முதல் மத்திய ரயில்வே பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். கடந்த முறை ரயில்வே பட்ஜெட்டை சதானந்த கவுடா வெளியிட்டார்.
பிற திட்டங்கள்
ரயில் பெட்டிகளில் சோலார் மின்சாரத்தை பயன்படுத்துவது மட்டும் அல்லாமல், ரயில்வே நிலையங்கள், பிளாட்பார்ம்களிலும் சோலார் மின்சாரத்தை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தனி உற்பத்தி தளம் மற்றும் பட்டறைகளை ரயில்வே நிலையங்களில் அமைக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
எரிப்பொருள்
மத்திய ரயில்வே அமைச்சகம் இனிவரும் காலத்தில் இந்திய ரயில்வே துறையில் மாற்று எரிபொருளை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என நிர்ணயம் செய்யதுள்ளது. இதற்காக தான் சோலார், வேஸ்ட் டூ எனர்ஜி போன்ற திட்டங்களை செயல்படுத்த உள்ளது.