மும்பை: வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் மூலம் 7,000 கோடி ரூபாய் கடன் பெற்று திரும்ப அளிக்க முடியாத நிலையில் நிற்கும் யூபி குரூப் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை கைப்பற்ற 17 நிறுவனங்கள் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தலைமையில் செயல்பட்டு வருகிறது.
இப்பணியில் முதல் படியாக விஜய் மல்லையாய தலைமையில் செயல்பட்டு வந்த கிங்பிஷர் நிறுவனத்தின் "கிங்பிஷர் ஹவுஸ்" கட்டிடத்தை கைப்பற்ற ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தலைமையிலான குழு முடிவு செய்துள்ளது.
கிங்பிஷர் ஹவுஸ்
கிங்பிஷர் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கிங்பிஷர் ஹவுஸ் 17,000 சதுரடியில் மும்பை வைல் பார்லேவில் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் மதிப்பு சுமார் 100 கோடியாகும்.
6800 கோடி கடன்
இந்நிறுவனம் கடன் பெற்ற 7,000 கோடி ரூபாய் கடனில் பங்கு விற்பனை மற்றும் இதர சொத்து கைபற்றுதல் மூலம் 200 கோடி ரூபாய் கடன் குறைந்தாலும், மீதமுள்ள 6,800 கோடி ரூபாய் கடன் தொகையை பெறவே இத்தகைய நடவடிக்கைகளில் கடன் அளித்த நிறுவனங்கள் இறங்கியுள்ளது.
கிங்பிஷர் நிறுவனம்
இதுக்குறித்து கிங்பிஷர் நிறுவனம் கூறுகையில் கடன் நிலுவையின் காரணமாக மும்பையில் உள்ள கிங்பிஷர் ஹவுஸ் சொத்துக்களை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தலைமையிலான குழுவிற்கு அளித்துள்ளோம் என செவ்வாய் கிழமை தெரிவித்தது.
மாஜிஸ்திரேட் ஆர்டர்
கிங்பிஷர் நிறுவனத்தின் இந்த சொத்துக்களை ஸ்டேட் பாங்கு தலைமையிலான குழு கைபற்ற எந்த விதிமான தடையும் இல்லை என தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் ஆணை பிறப்பித்த பின்னரே இப்பணிகள் துவங்கப்பட்டது.