டெல்லி: நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் பிப்ரவரி மாதத்தில் சுமார் 37,305 வாகனங்களை விற்றுள்ளது. கலால் வரி உயர்விற்கு பின் பல நிறுவனங்களின் விற்பனை அளவு பாதிக்கப்பட்ட நிலையில் இந்நிறுவனத்தின் விற்பனை சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது.
இதே காலகட்டத்தில் கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் இந்நிறுவனம் 34,005 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது குறிப்பிடதக்கது. இது கடந்த வருடத்தை விட 9.7 சதவீத வளரச்சியாகும்.
இந்நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை அதிகரித்தாலும், ஏற்றுமதியில் 17.5 சதவீத சரிவை தழுவியுள்ளது. பிப்ரவரி 2015ஆம் நிதியாண்டில் 10,307 கார்களை மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது. இது கடந்த வருடத்தில் 12,500 ஆக இருந்தது குறிப்பிடதக்கது.
இதுக்குறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் உயர் துணை தலைவரான ராகேஷ் ஸ்ரீவட்சவ் கூறுகையில்,"ஹூண்டாய் நிறுவனத்தின் எலைட் ஐ20 வாகனத்தின் வெற்றியால் பிப்ரவரி மாதத்தில் இந்நிறுவனம் சுமார் 37,000 வாகனங்களை விற்பனை செய்துள்ளது."
மேலும் இக்காலகட்டத்தில் புதிதாக ஹுண்டாய் தயாரிப்புகளை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.