கோயம்புத்தூர்: நாட்டின் பெரிய வாட்ச் தயாரிப்பு நிறுவனமான டைட்டன் நிறுவனம் கோயம்புத்தூரில் புதிதாக துவங்கியுள்ள தொழிற்சாலையில் வாட்ச் தயாரிப்புக்கான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உதிரிபாகங்களின் உற்பத்தியைத் துவங்கியுள்ளது.
இதன் மூலம் இப்பகுதியில் இந்நிறுவனத்தின் மூலம் சுமார் 500க்கும் மேற்ப்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புகள் உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டைட்டன் கம்பெனி
"டைட்டன் கம்பெனி லிமிடெட் நிறுவனம், உலகத்தரம் வாய்ந்த ஸ்டீல் உள்ளகங்களை (cases) தயாரிக்கும் பணியை கோயம்புத்தூரில் உள்ள சுமார் 75 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள புதிய ஆலையில் துவங்கியுள்ளது" என அந்த நிறுவனம் பங்குச் மும்பை பங்குச் சந்தை விவரப் பதிவில் தெரிவித்துள்ளது.
கோயம்புத்தூர் தொழிற்சாலை
11.3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலை 75 கோடி ரூபாய் பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் உள்ளகங்களை (cases) தயாரிக்கும் அளவை 2 மில்லியனாக உயர்த்த இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
வாட்ச் தயாரிப்பு
இந்த தொழிற்சாலையில் வாட்ச் தயாரிப்புக்கான ஸ்டீல் உள்ளகங்கள், அதற்கான உதிரிபாகங்கள் மற்றும் கருவிகள், பிரஸ் ஷாப், மெஷினிங், பாலிஷிங் மற்றும் அசெம்ப்ளி ஆகிய அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய உற்பத்தி மையமாகத் திகழ்வதுடன் இதர சேவைகளின் நிர்வாகம், பராமரிப்பு, உற்பத்திச் செலவுக் கணக்கு மற்றும் தரக் கட்டுப்பாட்டு மேலாண்மை ஆகியவற்றியும் உள்ளடகியிருக்கும்.
ஆறாவது இடம்
ஒசூர் உற்பத்தித் தொழிற்சாலை மற்றும் வட இந்தியாவில் மூன்று அசெம்ப்ளி தொழிலகங்களையும் கொண்டு உலக அளவில் வாட்ச் உற்பத்தி நிறுவனங்களில் ஆறாவது இடத்தில் டைட்டன் நிறுவனம் உள்ளது.
மேலாண்மை இயக்குனர்
இதுக்குறித்து இந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பாஸ்கர் பட் கூறுகையில் டைட்டன் நிறுவனம் தன்னுடைய அனைத்து தொழில்களிலும் மிகவும் பெருமை கொள்ளத் தக்கவகையில் சேவைகளை வழங்குகிறோம். இந்த பயணத்தில் உலகத்தரம் வாய்ந்த ஸ்டீல் உள்ளகங்கள் தயாரிப்பு ஒரு முக்கிய அங்கம் என தெரிவித்தார்.