மும்பை: மார்ச் 4ஆம் தேதி துவங்கிய ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் இந்திய தொலைதொடர்பு நிறுவனங்கள் மிகவும் ஆர்வமுடன் பங்கேற்றது. இதன் மூலம் முதல் நாள் ஏலத்திலேயே அலைகற்றைக்கு மத்திய அரசு நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விட 73 சதவீதம் வரை உயர்ந்தது.
இந்த ஏலத்தின் மூலம் மத்திய அரசு சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் வரை நிதி திரட்ட முடியும் என நம்புகிறது. மேலும் விலை மதிப்பில் இந்தியாவில் நடைப்பெறும் மிகப்பெரிய ஸ்பெக்ட்ரம் ஏலம் இது.
60,000 கோடி ரூபாய்
முதல் நாள் ஏலத்தில் 1800 MHz, 800 MHz, 900 MHz மற்றும் 2100 MHz பேண்ட் அலைகற்றைகளை சுமார் 6 சுற்றுகளாக ஏலம் நடத்தப்பட்டது. இந்த ஏலத்தின் மூலம் சுமார் 60,000 கோடி ரூபாய் மதிப்பிலான அலைகற்றைகளை மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் விற்றுள்ளது.
ஏல முடிவு
மத்திய தொலைதொடர்பு அமைச்சகத்தின் கணிப்புகளின் படி ஏல முடிவில் சுமார் 82,000 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட முடியும் என தெரிவித்துள்ளது. மேலும் 900 MHz பேண்ட் அலைகற்றை பெறுவதற்காக எந்த நிறுவனமும் விண்ணப்பம் அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
3ஜி சேவை
முதல் நாள் ஏலத்தில் டெல்லி, மும்பை, அந்திர பிரதேசம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கும் ஒதுக்கப்பட்டு இருக்கும் 3ஜி சேவைக்கு பயன்படுத்தும் 2100 MHz அலைகற்றை எந்த ஒரு நிறுவனமும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. அதேபோல் 1800 MHz மற்றும் 800 MHz அலைகற்றை ஏலத்தில் மந்த நிலை நிலவியது.
42,000 கோடி ரூபாய்
கடந்த முறை நடந்த ஸ்பெட்ரம் ஏலத்தில் முதல் நாளில் 42,000 கோடி ரூபாய் மதிப்புள்ள அலைகற்றை விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.
20 வருட உரிமம்
மத்திய அரசு அலைகற்றைக்கான 20 வருட உரிமத்தை நீட்டிக்க விருப்பம் இல்லாததால், நாட்டின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடாபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்கும் கட்டாயத்தில் உள்ளது.