டெல்லி: உலகளவில் ஆயுதம் மற்றும் பாதுகாப்பு கருவிகளை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவை மிஞ்சியது சவுதி அரேபியா. 65 நாடுகளுக்கு இடையே ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டும் ஆயுத இறக்குமதி குறித்த ஆய்வில் 2014ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி சவுதி அரேபியா முதல் இடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம் இந்தியா இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
குளோபல் டிபென்ஸ் டிரேடு ரிப்போர்ட் என்ற தலைப்பில் 65 நாடுகளுக்கு மத்தியில் அமெரிக்காவை சேர்ந்த ஐஎச்எஸ் ஜேன் 360 நிறுவனம் சில ஆய்வுகளை மேற்கொண்டது, இதில் அதிக ஆயுத இறக்குமதி செய்யப்பட்ட நாடுகளில் சவுதி அரேபியா முதல் இடத்தை பிடித்துள்ளது.
இந்தியா
கடந்த 5 வருடங்களாக அதிகளவிலான ஆயுத இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா டாப் 5 இடங்களுக்குள்ளே இருந்து வந்த நிலையில் 2013ஆம் ஆண்டு முதல் இடத்தை பிடித்திருந்தது. 2014ஆம் ஆண்டில் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் நாட்டிலேயே அதிகளவிலான ஆயுதங்களை உற்பத்தி செய்ய மத்திய அரசு முடிவு செய்த நிலையில் இந்த வருடம் இப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது.
சவுதி அரேபியா
2014ம் ஆண்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளிய சவுதி அரேபியா ஆயுத இறக்குமதிக்காக 6.4 பில்லியன் டாலர் முதலீடு செய்து இப்பட்டியலில் முதலிடம் பிடித்து உள்ளது. இது கடந்த வருடத்தை விட 54 சதவீதம் அதிகமாகும். இந்தியா இந்த வருடம் 5.57 பில்லியன் டாலர் மட்டுமே முதலீடு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடதக்கது.
சீனா
இப்பட்டியலில் சவுதி அரேபியா மற்றும் இந்தியாவிற்கு அடுத்து சீனா முன்றாம் இடத்தை பிடித்துள்ளது. 2013ஆம் ஆண்டில் சினா 5-வது இடத்தில் இருந்தது குறிப்பிடதக்கது.
ஏற்றுமதியில் முதல் இடம்
உலகளவில் ஆயுதம் ஏற்றுமதி செய்வதில் இந்த வருடமும் அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது. 2014ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 23.7 பில்லியன் டாலர் அளவு ஆயுதங்களை உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
பிற நாடுகள்
ஆயுதம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் அமெரிக்காவை அடுத்து ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, இஸ்ரேல், சீனா ஆகிய நாடுகள் அடுத்தெடுத்த இடங்களை பிடித்துள்ளது.