டெல்லி: வேகமான வளர்ச்சி பாதையில் சென்று கொண்டு இருக்கும் இந்தியாவில் மோடி தலைமையிலான அரசு பல புதிய திட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் வர்த்தக ஒழுங்குமுறையில் உள்ள தடைகளை நீக்கினால் அமெரிக்க உடனான வர்த்தகம் 100 பில்லியன் டாலரில் இருந்து 500 பில்லியன் டாலர் வரை உயரும் என அமெரிக்காவின் வெளியுறவுக் குழுவின் தலைவர் எட் ராய்ஸ் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் 2015-16
மத்திய அரசு தற்போது அறிவித்த 2015-16ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கை நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அன்னிய முதலீட்டை அதிகளவில் ஈர்க்கும் வண்ணம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கட்டுமானத் துறை
மத்திய அரசு அறிவித்த பட்ஜெட் அறிக்கையில் நாட்டின் கட்டுமானத் துறைக்கு மேம்படுத்தும் திட்டங்களும், கார்ப்பரேட் வரியை அடுத்த 4 வருடத்திற்கு 5 சதவீதம் குறைத்துள்ளது நாட்டின் வளர்ச்சியில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அமெரிக்க நிறுவனங்கள்
இன்றைய நிலையில் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள வாய்ப்புகளை உற்று கவனித்து வருவதாகவும், கூடிய விரைவில் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்தியாவில் முழுமையான வர்த்தகத்தை துவங்கும் என தான் எதிர்ப்பார்ப்பதாக எட் ராய்ஸ் தெரிவித்தார்.
இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம்
அமெரிக்க மற்றும் இந்தியாவிற்கும் இடையே போட்ப்பட்டுள்ள இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் 4இல் ஒரு பகுதிதான தற்போதைய வர்த்தக நிலை (100 பில்லியன் டாலர்). இதை 500 பில்லியன் டாலர் அளவு உயர்த்துவது மிகவும் எளிது எனவும் ராய்ஸ் தெரிவித்தார்.
உக்ரைன்
செய்தியாளர் ஒருவர் உக்ரைன் பிரச்சனையில் இந்தியாவின் நிலை என்ன என்று கேள்வி எழுப்பியவருக்கு, உக்ரைன் பிரச்சனையின் மூலம் இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தகம் துளியும் பாதிக்காது என தெரிவித்தார்.