டெல்லி: 2014-15ஆம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான 11 மாத காலகட்டத்தில் நாட்டின் மறைமுக வரி வசூல் சுமார் 7.4 சதவீத அளவு உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரையில் மறைமுக வரியாக சுமார் 4,78,630 கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
7.4% உயர்வு
கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நாட்டின் மறைமுக வரி 4,41,565 கோடியாக இருந்தது குறிப்பிட்டதக்கது. நடப்பு நிதியாண்டை ஒப்பிடுகையில் இதன் அளவு 7.4 சதவீதம் உயர்வாகும்.
சுங்க வரி
2014ஆம் நிதியாண்டின் 11 மாத காலகட்டத்தில் சுங்க வரி அளவு சுமார் 8.3 சதவீதம் உயர்ந்து 1,70,943 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டின் சுங்க வரி வசூல் 1,57,944 கோடி ரூபாயாக உள்ளது.
சேவை வரி மற்றும் கலால் வரி
சுங்க வரியை போலவே சேவை வரியும் 8.3 சதவீதம் உயர்ந்து 1,45,007 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல் கலால் வரியும் 5.3 சதவீதம் உயர்ந்து 1,62,680 கோடி ரூபாயாக உள்ளது குறிப்பிடதக்கது.
நேரடி வரி வசூல்
இதே காலகட்டத்தில் நாட்டின் நேரடி வரி வசூல் அளவு 10.67 சதவீத அதிகரித்து 6.12 இலட்சம் கோடி ரூபாயாக உள்ளது. கடந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி முதலான காலக்கட்டங்களில் நாட்டின் நேரடி வரி வசூல் அளவு 5.53 இலட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடதக்கது.