சென்னை: வருகிற மே மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ள நிலையில், தொழில்துறை ஆய்வு அமைப்பான அஸோசாம் கூட்டமைப்பு, இந்தியாவில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்துள்ளது.
இதன் மூலம் உலக முதலீட்டாளர்கள் மாநாடுக்குப் பின் தமிழ்நாட்டில் பன்னாட்டு நிறுவனங்கள் நேரடியாக தொழில் தொடங்க முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாநிலத்தின் வரி வருமானம், வேலைவாய்ப்பு, பொருளாதாரா நிலையை ஆகிய அனைத்தும் மேம்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அஸோசாம்
இந்தியாவில் முக்கியமாக கருதப்படும் 9 வளர்ச்சி காரணிகளில் பொருளாதாரம், மின்சாரம், சாலை, சுகாதாரம் ஆகிய 8 காரணிகளில் உச்சம் பெற்று திகழ்கிறது தமிழ்நாடு. குறிப்பாக கல்வித் துறையில் முன்னிலை வகிக்கிறது என அஸோசாம் ஞாயிற்றுகிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2வது இடத்தில் கேரளா
தமிழ்நாட்டை தொடர்ந்து ஒட்டுமொத்த வளர்ச்சி, வருமானம் மற்றும் சாலை ஆகியவற்றில் முன்னணி மாநிலமாக கேரளா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
பிற மாநிலங்கள்
9 காரணிகளில் 4 பிரிவில் குஜராத், ஆந்திர பிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. 3 பிரிவில் உத்திர பிரதேசம், ஹரியானா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.
மோசமான வளர்ச்சி
இப்பட்டியலில் மோசமான வளர்ச்சியைச் சந்தித்த மாநிலங்களில் அசாம், மத்தியப் பிரதேசம், பீகார், உத்தரப் பிரதேசம், ஒடிசா, ஜம்மு-காஷ்மீர், சட்டீஸ்கர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
தொழில்துறை வளர்ச்சி
மேலும் தொழில்துறை வளர்ச்சியில் குஜராத் மாநிலம் முதல் இடத்தையும், தமிழ்நாடு 2வது இடத்தையும் பிடித்துள்ளன. மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.