டெல்லி: நாட்டின் பணவீக்கம் மற்றும் வர்த்தக நிலையை மேம்படுத்த குறைந்த காலகட்டத்தில் இரண்டு முறை வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்தும், வணிக வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைக்காமல் மக்களை ஏமாற்றி வருகின்றன.
இதனை நினைவூட்டும் வகையில், வணிக வங்கிகள் மக்களுக்கு அளிக்கும் கடன்களுக்கு வட்டி விகிதத்தை உடனடியாகக் குறைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் எஸ்.எஸ் முந்திரா எச்சரித்துள்ளார்.
கடந்த 2 மாத காலத்தில் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கும் அளிக்கப்படும் கடன் விகிதமான ரெபோ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்தது. இதனால் ரெப்போ விகிதம் 8 சதவீதத்தில் இருந்து 7.50 சதவீதமாகக் குறைந்தது.
இதன் மூலம் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் அதிகளவிலான வருமானத்தை பெற்றன. இன்னொரு பக்கம் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் -2.5 சதவீதம் வரை குறைந்தது. இதன் விளைவாக உணவுப் பணவிக்கத்தின் அளவு 6.5 சதவீதமாக குறைந்துள்ளது.
ரிசர்வ் வங்கி வரும் ஏப்ரல் 7ஆம் தேதி வெளியிட உள்ள இருமாத வங்கிக் கொள்கைக்காக மற்ற வங்கிகள் காத்திருப்பதாக பிற வங்கி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. அதன்பிறகே கடனுக்கான வட்டி வகிதத்தில் 10 முதல் 25 அடிப்படை புள்ளிகள் வரை குறைப்பார்களாம்.