டெல்லி: வங்கி ஊழியர்களின் பல கட்ட வேலைநிறுத்தப் போராட்டங்களுக்குப் பின் வங்கிகளுக்கு மாதத்தில் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த ஒரு வருடமாக வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், ஊதிய உயர்வு, வாரத்தில் 5 வேலைநாட்கள் போன்ற காரணங்களுக்காக வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வந்தனர்.
இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் 15 சதவீத ஊதிய உயர்வும், வாரத்தில் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகள் விடுமுறை அளிப்பதாக வங்கி அமைப்புகளுக்கு நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வியாழக்கிழமை வெளியிட்டது.
வாரத்தில் 5 வேலைநாட்கள்
வங்கி அமைப்புகள் வாரத்தில் 5 வேலைநாட்கள் அளிக்கும்படி, மத்திய அரசை நிர்பந்தம் செய்து வந்த நிலையில், பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் மாதத்தில் 2 சனிக்கிழமை நாட்கள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக இருதரப்பும் ஒப்புக்கொண்டன.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா
இதுக்குறித்து எஸ்பிஐ வங்கி தனது கிளை மற்றும் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், இந்திய வங்கிகள் அமைப்புகளின் பரிந்துரையின் படி மத்திய அரச மாத மாதத்தில் 2வது மற்றும் 4வது சனிக்கிழமை விடுமுறை அளிக்க ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்துள்ளது.
முழு வேலைநாள்
பிற சனிக்கிழமைகளில் வங்கிகள் முழு நாள் செயல்படும் எனவும், இதற்கான அறிவிப்பை அனைத்து வங்கி அறிவிப்பு பலகையிலும் இருக்க வேண்டும் என வங்கி அமைப்புகள் வங்கிக் கிளைகளை அறிவுறுத்தியுள்ளது.
ஊதிய உயர்வு
நிதியமைச்சகம் அரசு வங்கி பணியாளர்களின் சம்பள உயர்வும் நவம்பர் 1, 2012 முதல் கணக்கிடப்படும் எனவும் IBA அமைப்புத் தெரிவித்துள்ளதாக இக்கடிதம் கூறுகிறது.