டெல்லி: நிதி நெருக்கடியால் முடங்கிய கிங்பிஷர் நிறுவனத்திற்குப் புதிதாக ஒரு பிரச்சனை கிளம்பியுள்ளது.
இந்நிறுவனத்தின் பணியாளர்களுக்குச் சம்பளம் அளித்ததில் வருமான வரித்துறையிடம் இருந்து விலக்குப் பெற்றது. ஆனால் அதற்காகச் செலுத்த வேண்டிய தொகையை இத்துறையிடம் செலுத்தாமல் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஏமாற்றி வந்தது.
இதனை எதிர்ந்து, வருமான வரித்துறை கடந்த வருடம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தது. திங்கட்கிழமை இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் வருமான வரித்துறைக்கு 372 கோடி ரூபாய் செலுத்த கிங்பிஷர் நிறுவனத்திற்கு உத்திரவிட்டது.
பணியாளர்களின் சம்பளம்
கிங்பிஷர் நிறுவனம் நிதி நெருக்கிடியில் சிக்கித் தவித்ததால் இந்நிறுவன பணியாளர்களுக்குச் சுமார் ஒரு வருட சம்பளத்தை நிலுவையில் வைத்திருந்தது.
இதனை எதிர்க்கும் வகையில் இந்நிறுவன ஊழியர்கள் பல போராட்டங்கள் மற்றும் வழக்குகளைத் தொடுத்தனர். இதன் பின் சில சதவீத சம்பளத்தை மட்டுமே கிங்பிஷர் இந்நிறுவன பணியாளர்களுக்கு அளித்தது.
இதிலும் கோல்மால்...
இப்படிப் பணியாளர்களுக்குக் குறைவான சம்பளம் அளித்ததிலும், கிங்பிஷர் நிறுவனம் கோல்மால் செய்துள்ளது. பணியாளர்களுக்குச் சம்பளம் அளித்ததில் மொத்த வருமானத்தில் வரி விலக்குப் பெற்றது கிங்பிஷர். இதில் இத்துறைக்குச் செலுத்த வேண்டிய 302 கோடி ரூபாயை செலுத்தவில்லை.
மூன்று வருட வட்டி
இந்நிறுவனத்தை எதிர்த்து வழக்கு தொடுத்த வருமான துறை, நிலுவை தொகையான 302 கோடி ரூபாய் மற்றும் 2010-11, 2011-12 மற்றும் 2012-13 ஆகிய 3 ஆண்டுகளுக்கான வட்டித் தொகை 70 கோடி ரூபாயும் இந்நிறுவனத்திடம் இருந்து கோரியுள்ளது.
தவறான கணக்கு
இவ்வழக்கின் முந்தைய விசாரணையில் கிங்பிஷர் நிறுவன தரப்பில் ஆஜரான அபிஷேக் மனு சிங்வி வருமான வரித்துறை தவறாகக் கணக்கிட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
வரிசையில் வருமான வரித்துறை
இந்நிறுவனம் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து பெறப்பட்ட 4,000 கோடி ரூபாய் கடன் தொகை மீட்க வங்கி நிர்வாகம் போராடும் நிலையில், தற்போது வருமான வரித்துறை இப்படியலில் இணைந்துள்ளது.
நிறுவன முடக்கம்
பணியாளர்கள் போராட்டத்திற்குப் பிறகு இந்நிறுவனத்தில் பணியாளர்கள் எண்ணிக்கை அதிகளவில் குறைந்தது. இதனால் இந்நிறுவனத்தின் விமானச் சேவை பாதித்தது.
மேலும் விமானத்திற்கான குத்தகை தொகை அளிக்க முடியாத காரணத்தினால் விமானங்கள் கைபற்றப்பட்டன.
பங்கு வர்த்தகம்
இதனைத் தொடர்ந்து இந்நிறுவனத்தின் விமானச் சேவை முடங்கியதாலும், கடன் அளவு 4,000 கோடி ரூபாயை எட்டியதாலும் பங்குச்சந்தையில் இந்நிறுவனத்தின் வர்த்தகம் முடக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள்
கிங்பிஷர் நிறுவனத்திற்குக் கடன் அளித்த நிறுவனங்கள் இந்நிறுவன சொத்துகளை விற்று நிதி திரட்ட தனிக் குழு அமைக்கப்பட்டு அதற்கான பணிகளைச் செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications