டெல்லி: பொதுத் துறை நிறுவனங்களிலிருந்து அரசின் பங்குகளை விலக்கிக் கொள்வதை இன்னும் தீவிரப்படுத்துகிறது மோடி அரசு.
ரூ 41,000 கோடி நிதி திரட்டுவதற்காக, ஐஓசி, ஹிந்துஸ்தான் காப்பர் போன்ற 13 லாபம் தரும் நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்கப் போகிறது.
2015-16ஆம் நிதியாண்டுக்கான நிதி தேவையை ஈடுகட்ட, இந்த பங்கு விலக்கத்தை மத்திய அரசு செய்யப் போகிறதாம்.
இந்த நிறுவனங்களிலிருந்து 5 முதல் 15 சதவீத பங்குகளை அரசு விலக்கிக் கொள்ளப் போகிறது. இதற்கான ஒப்புதலை மத்திய முதலீட்டு விலக்க அமைச்சகத்துக்கு அளித்துவிட்டது மத்திய அரசு.
இதன் படி இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட், நால்கோ (NALCO), என்எம்டிசி (NMDC) மற்றும் இந்தியன் ஆயில் கார்பரேஷன் (IOC) ஆகிய நிறுவனங்களிலிருந்து 10 சதவீத பங்குகளை விலக்கிக் கொள்ளப் போகிறது.
தேசிய உரங்கள் நிறுவனம் (NFL), ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (HCL), இந்திய சுற்றுலா மற்றும் மேம்பாடு கார்பரேஷன் (ITDC), மாநில வரத்தக நிறுவனம் (STC) மற்றும் MMTC ஆகி நிறுவனங்களிலும் 10 சதவீத பங்குகளை தனியாருக்கு வழங்கப் போகிறது.
பெல், என்டிபிசி, ராஷ்ட்ரிய கெமிக்கல் மற்றும் உரங்கள் நிறுவனம் மற்றும் DCIL நிறுவனங்களில் 5 சதவீத பங்குகளை விலக்கிக் கொள்ளப் போகிறது.