டெல்லி: நாட்டின் முன்னணி மொபைல் சேவை நிறுவனமான ஏர்டெல் 2014ஆம் நிதியாண்டில் அதிகளவிலான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளதால், இந்நிறுவனத்தின் வருடாந்திர லாப அளவு சுமார் 87 சதவீதம் உயர்வை சந்தித்துள்ளது.
மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த 2014ஆம் நிதியாண்டில் ஏர்டெல் நிறுவனத்தின் லாப அளவு 5,183 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதன் அளவு 2,773 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது குறிப்பிடதக்கது.
இக்காலக்கட்டத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.85,746 கோடியில் இருந்து 7.3 சதவீதம் உயர்ந்து 92,039 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும் இந்நிறுவனத்தின் மொபைல் டேட்டா சேவையின் மூலம் கிடைக்கப்பெறும் மொத்த லாபம் 30 சதவீதம் உயர்ந்து 1,255 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதன் அளவு 962 கோடி ரூபாயாக இருந்தது என ஏர்டெல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.