மும்பை: அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இன்பராடெல் லிமிடெட் நிறுவனம் தனது டெலிகாம் டவர் மற்றும் பைபர் ஆப்டிக் சொத்துக்களை விற்கும் பணிகளை மீண்டும் துவங்கியுள்ளது.
இந்நிறுவனத்தின் கடன் அளவு அதிகரித்ததாலும், வர்த்தகம் குறைந்ததாலும், நிறுவன சொத்துக்களை விற்க அனில் அம்பானி முடிவு செய்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு இதனை விற்க முடிவு செய்யும்போது மதிப்பீட்டில் பிரச்சனை வந்ததால், இம்முயற்சி கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விற்பனை
இந்நிறுவனம் டெலிகாம் டவர் மற்றும் பைபர் ஆப்டிக் வர்த்தகத்தில் இருந்து விலக முடிவு செய்திருந்தாலும், தற்போது இந்நிறுவனம் சொத்துக்களை முழுமையாக விற்க உள்ளதா என்பது ரிலையன்ஸ் இன்பராடெல் லிமிடெட் தெரிவிக்கவில்லை.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்
இதுகுறித்துப் பங்குச்சந்தைக்கு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் அளித்த பதிலில், "நிறுவனத்தின் முந்தைய திட்டங்களின் படி நிறுவனத்தின் கடன் அளவு அதிகளவில் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் நிறுவனம் கடன் அளவை குறைக்கப் புதிய வழிமுறைகளை ஆய்வு செய்து வருகிறோம்" என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதலீட்டு வங்கிகள்
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் நிதி மற்றும் வர்த்தக நிலையை மேம்படுத்த, இதன் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் இன்பராடெல் நிறுவனத்தின் டெலிகாம் டவர் மற்றும் பைபர் ஆப்டிக் சொத்துக்களில் முதலீடு செய்யச் சில முதலீட்டு வங்கிகளை அழைத்துள்ளோம்.
இத்திட்டத்தின் முன்னேற்றங்களைத் தொடர்ந்து தெரியப்படுத்துகிறோம் எனப் பங்குச்சந்தைக்கு ஆர்காம் (RCOM) தெரிவித்தது.
சொத்துக்கள்
ரிலையன்ஸ் இன்பராடெல் நிறுவனத்திடம் 45,443 வையர்லெஸ் டெலிகாம் டவர் மற்றும் 1.2 லட்ச இன்ட்ரா மற்றும் இன்டர் வளைய பைபர் ஆப்டிக் இணைப்புகள் கொண்டுள்ளது.
இந்தியாவில் 3வது நிறுவனம்
இந்தியாவில் அதிக டெலிகாம் டவர்களைக் கொண்டுள்ள நிறுவனங்களில் ரிலையன்ஸ் இன்பரடெல் 3வது இடத்தில் உள்ளது. முதல் இரண்டு இடங்களில் இன்டஸ் டவர் மற்றும் பார்தி ஏர்டெல் உள்ளது.
தொலைத்தொடர்பு துறை
டெலிகாம் துறையில் இந்தியா கடந்த 5 வருடத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில் வாடிக்கையாளர் எண்ணிக்கையிலும் தொடர்ந்து உயர்வைச் சந்தித்து வருகிறது.
இத்துறையின் தொடர் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டு, சமீபத்தில் நடந்த ஸ்பெக்ட்ரம் ஏலம். ஏலத் தொகை ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருந்தது.