மும்பை: இணைய வங்கி வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் வைப்புகளின் அடிப்படையில் சேமிப்புக் கணக்கில் இருப்பிற்கும் மேல் பணமெடுக்கும் வசதியை எஸ்பிஐ வழங்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்த வசதி இதுவரை வங்கிக் கிளைகளில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இச்சேவையில் தற்போது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வைப்புகளுக்கு எதிராக சேமிப்புக் கணக்குகளில் இருக்கும் இருப்பைவிட அதிகமாக பணமெடுக்கும் வசதியை அளிக்கிறோம். இது அவர்கள் விரும்பிய வண்ணம் இந்த வசதியைப் பயன்படுத்த வழி செய்யும் என்று அவ்வங்கியின் தனிநபர் சேவைகளுக்கான முதன்மைப் பொது மேலாளர் அனுராதா ராவ் தெரிவித்தார்.
வாடிக்கையாளர் வைப்பு நிதியில் வைத்திருக்கும் தொகையில் 90 சதவீதம் வரை overdraft முறையில் பெற்றுக் கொள்ளலாம். இச்சேவையைப் பெற வங்கிக் கிளையை அணுக வேண்டிய அவசியமின்றி இதனை உடனடியாகப் பெற இயலும்.
துவக்கச் சலுகையாக இணைய வாடிக்கையாளர் வைத்துள்ள வைப்பின்வட்டி விகிதத்திற்குக் கூடுதலாக 0.5 சதவிகித வட்டி மட்டுமே வசூலிக்கப்படும்
வங்கிக் கிளைகளில் நேரடியாக பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கும் குறைந்த காலச் சலுகையாக இந்த வட்டிவிகிதத்தை 1 சதவிகிதத்திலிருந்து 0.5 சதவிகிதமாக குறைத்துள்ளது.
இந்த வங்கி தற்போது 2.15 கோடி இணைய வாடிக்கையாளர்களையும் எண்ணிக்கையில் 4.83 கோடி வைப்புகளையும் கொண்டுள்ளது.
மேலும் இந்தப் புதிய வசதியை மொபைல் போன்களிலும் செயல்படுத்தும் முயற்சிகளில் இவ்வங்கி இறங்கியுள்ளது.