பெங்களுரூ: இந்தியாவில் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் நிறுவனம், தனது உயர்மட்ட பணியாளர்கள் சிலருக்கு மட்டும் 2015-16ஆம் ஆண்டுக்கான சம்பளத்தை 200 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.
மேலும் 200 சதவீதம் சம்பள உயர்வு பெற்ற அனைவரும் இந்நிறுவனத்தில் ஏற்கனவே அதிகச் சம்பளம் வாங்கும் பணியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் தான் அவர்கள்!!
இந்த வருடம் இன்போசிஸ் நிறுவனத்தில் விஷால் நியமனத்திற்குப் பிறகு, பணியாளர்களுக்குச் சம்பளம் உயர்வு, பதவி என வாரி வழங்கி வருகிறது.
இந்நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தில் சிஓஓ யுபி பிரவீன் ராவ், சிஎப்ஓ ராஜிவ் பன்சால், குளோபல் சர்வீஸ் தலைவர் ஸ்ரீகாந்தன் மூர்த்தி ஆகியோரின் போன்ஸ் மற்றும் ஊக்கத் தொகையை 200 சதவீதம் அதிகரித்துள்ளது.
பிரவீன் ராவ்
கடந்த வருடம் சம்பளம், போனஸ் மற்றும் ஊக்கத் தொகையாகப் பிரவீன் ராவ் பெற்ற தொகை 333,085 டாலர் மட்டுமே. தற்போது இதன் அளவு 197 சதவீதம் உயர்ந்து 990,702 டாலராக இன்போசிஸ் உயர்த்தியுள்ளது.
ராஜீவ் பன்சால்
அதேபோல் இந்நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியான ராஜீவ் பன்சால்-இன் மொத்த வருமானம் (சம்பளம்,போனஸ் மற்றும் ஊக்கத் தொகை) 170 சதவீதம் உயர்ந்து 770,858 டாலராக உயர்ந்துள்ளது. கடந்த வருடம் இவரின் வருமானம் 284,892 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீகாந்தன் மூர்த்தி
பிரவீன் ராவ் மற்றும் ராஜீவ் பன்சால் ஆகியோரை ஒப்பிடுகையில் ஸ்ரீகாந்தன் மூர்த்தி அதிகளவிலான உயர்வைப் பெற்றுள்ளார்.
சில மாதங்கள் முன்பு வரை இந்நிறுவனத்தின் மனித வளப் பிரிவின் தலைவராக இருந்தவர் தற்போது குளோபல் சர்வீஸ் மற்றும் டெலிவரி பிரிவின் தலைவராக உள்ளார்.
இவரின் வருமானம் தற்போது 202 சதவீதம் உயர்ந்து 658,636 டாலராக உயர்ந்துள்ளது.
பிற பணியாளர்கள் நிலை
கடந்த வருடம் இந்நிறுவனம் தனது பணியாளர்களுக்கு அதிகப்படியாக 6-7 சதவீதம் வரையிலான சம்பள உயர்வை அளித்தது, இந்த வருடம் இதன் அளவு 6.5 சதவீதமாக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
மொத்த வருமானம்
8.7 பில்லியன் டாலர் மதிப்பு இந்நிறுவனத்தின் வருமான 7.1 சதவீதம் அதிகரித்துள்ள காரணத்தினால் இன்போசிஸ் நிர்வாகம் பணியாளர்களுக்கு அதிகளவிலான சம்பள உயர்வை அளித்து வருகிறது.