பெங்களூரு: நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சம்பளம் வாங்கும் ஊழியர்களின் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தில் விஷால் சிக்கா நியமனத்தின் பின், பணியாளர்களின் சம்பளம் மற்றும் பதவி உயர்வு ஆகியவை அதிகரித்துள்ளது.
ஒரு கோடி
இந்நிறுவனத்தில் 2013-14 நிதியாண்டில் 18 உயர்மட்ட நிர்வாக அதிகாரிகள் மட்டுமே 1 கோடி ரூபாய்க்கு அதிகமாக ஊதியம் பெறும் பட்டியலில் இருந்தனர். ஆனால் 2014-15 நிதியாண்டில் இதன் அளவு 113 ஆக உயர்ந்துள்ளது.
3 மடங்கு உயர்வு
இதே போல் ரூ.60 லட்சத்திற்கும் மேல் ஊதியம் பெறுபவர்கள் எண்ணிக்கை 72இல் இருந்து 3 மடங்கு உயர்ந்து 202 ஆக உயர்ந்துள்ளது.
நிர்வாக இயக்குனர்கள்
விஷால் சிக்கா நியமனத்திற்கு முன்பு இந்நிறுவனத்தின் உயர் துணை தலைவர்களுக்கு 1.5 கோடி ரூபாய்க்கும் குறைவான சம்பளம் மட்டுமே கிடைத்தது. ஆனால் தற்போது அனைத்துத் துறை மற்றும் பிரிவு துணை தலைவர்களும் 3 கோடி முதல் 4 கோடி ரூபாய் வரையில் சம்பளம் பெறுகின்றனர்.
நிறுவன சட்டம்
இந்திய நிறுவன சட்டத்தின் படி இந்தியாவில் அனைத்து நிறுவனங்களும் 60 இலட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் பணியாளர்களின் தகவல்களை வெளியிட வேண்டும். இதன் இன்போசிஸ் வெளியிட்ட நிறுவன அறிக்கையில் இந்தத் தகவல்கள் அனைத்தும் குறிப்பிட்டு இருந்தது.
விப்ரோவில் என்ன நிலை??
இன்போசிஸ் நிறுவனத்தை ஒப்பிடும் போது விப்ரோவில் கோடிகளைச் சம்பளமாகப் பெறும் ஊழியர்களின் எண்ணிக்கை வெறும் 36 தான்.
60 இலட்சத்திற்கும் அதிகமாகச் சம்பளம் பெறும் பணியாளர்கள் எண்ணிக்கை 114 என்பது குறிப்பிடத்தக்கது.