டெல்லி: மார்ச் மாதத்தில் இந்திய சந்தையில் அன்னிய முதலீட்டு அளவு சுமார் 40 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மோடி ஆட்சியில் அன்னிய முதலீட்டு அளவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மார்ச் மாதத்தில் திடீரென முதலீட்டு அளவு 40 சதவீதம் குறைந்து நான்கு மாத சரிவை தழுவியுள்ளது.
2.11 பில்லியன் டாலர்
இக்காலகட்டத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மூலம் இந்திய சந்தையில் வெறும் 2.11 பில்லியன் டாலர் முதலீடு மட்டுமே செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இதன் அளவு 3.53 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நிதி உட்செலுத்துதல்..
மேலும் 2014-15ஆம் நிதியாண்டில் அன்னிய முதலீட்டாளர்கள் மூலம் செய்யப்படும் முதலீட்டு அளவு 27 சதவீதம் உயர்ந்து 30.93 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் முதலீடுகள் திரும்பப்பெறப்பட்டுள்ளது.
முக்கியத் துறைகள்
மேலும் கடந்த ஒரு வருடத்தில் சேவைத்துறையில் 3.25 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. பிற அனைத்து துறைகளையும் விடவும் இத்துறையில் அதிப்படியான முதலீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிற துறைகள்
சேவைத்துறையை அடுத்து டெலிகாம் துறையில் அதிகளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் படி டெலிகாம் துறையில் (2.89 பில்லியன் டாலர்), ஆட்டோமொபைல் (2.57 பில்லியன் டாலர்), கம்பியூட்டர் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் (2.20 பில்லியன் டாலர்) மற்றும் பார்மா (1.52 பில்லியன் டாலர்).
நாடுகள்
இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்த நாடுகளில் வழக்கம் போல் மொரிஷியஸ் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 2014-15 ஆம் நிதியாண்டில் மொரிஷியஸ் (9.03 பில்லியன் டாலர்), சிங்கப்பூர் (6.74 பில்லியன் டாலர்), நெதர்லாந்து (3.43 பில்லியன் டாலர்), ஜப்பான் (2.08 பில்லியன் டாலர்) மற்றும் அமெரிக்கா (1.82 பில்லியன் டாலர்) ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது.
1 டிரில்லியன் டாலர் முதலீடு
அடுத்த 5 வருடத்தில் நாட்டின் உள்கட்டுமானம், துறைமுகம், ஏர்போர்ட் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைக்க மத்திய அரசிற்குச் சுமார் 1 டிரில்லியன் டாலர் முதலீடு தேவைப்படுகிறது.