மும்பை: இந்தியாவில் வங்கிச் சேவையைத் துவங்கப் பல பெரிய நிறுவனங்கள் போட்டிப் போட்ட நிலையில் சிறந்த திட்ட முறையைக் கொண்டு மைக்ரோ பைனான்ஸ் நிறுவனமான பந்தன், வங்கிகளை அமைப்பதற்கான அனுமதியைத் தட்டிச்சென்றது.
இந்நிலையில் பந்தன் நிதியியல் நிறுவனம் இந்தியாவில் முழுமையான வங்கியாகச் செயல்பட ரிசர்வ் வங்கியிடம் இருந்து புதன்கிழமை முறையான உரிமம் பெறப்பட்டதாகவும், ஆகஸ்ட் 23ஆம் தேதி தனது வங்கிச் சேவையைத் துவங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பந்தன் வங்கி
இதன் படி வருகிற ஆகஸ்ட் 23ஆம் தேதி கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு பந்தன் நிதியியல் நிறுவனம் 600 கிளைகள், 250 ஏடிஎம் இயந்திரங்கள் மற்றும் 34% மூலதனத்துடன் தனது "பந்தன் பாங்க்" பெயரில் தனது வங்கிச் சேவையை வெற்றிகரமாகத் துவங்க உள்ளது.
திட்டவடிவம்
இவ்வங்கி பெரு நகரங்களில் போட்டிப்போடுவதை விட, சிறு நகரங்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் சில்லறை மற்றும் குறு, சிறு நிறுவனங்களுக்கான நிதியுதவியை அளிக்கத் திட்டமிட்டுள்ளது.
இதனால் இப்புதிய வங்கியின் வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடிய விரைவில் புதிய உச்சத்தை எட்டும் என நம்பப்படுகிறது.
22 மாநிலங்கள்
தற்போதைய நிலையில் இந்நிறுவனம் இந்தியாவில் 2,200 அலுவலகங்கள் 22 மாநிலங்களில் இயங்கி வருகிறது. மேலும் 17,000 பணியாளர்களைக் கொண்டு 66 இலட்ச வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடன் அளவு
இந்நிறுவனம் கிராம மக்களுக்குப் பயன்படும் வகையிலும், அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் நோக்கில் சுமார் 10,000 கோடி ரூபாய் அளவு கடன் அளித்துள்ளது.
புதிய கிளைகள்
பந்தன் நிறுவனம் மேலும் 600 கிளைகளைக் கிராம பகுதிகளிலும், 200 கிளைகள் நகரம் மற்றும் பெரு நகரங்களில் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.