பெங்களூரு: மொபைல் உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் தைவான் நிறுவனமான ஃபாக்ஸ்கான், இந்தியாவில் தனது உற்பத்தி விரிவாக்கம் செய்ய 4 புதிய உற்பத்தி தளத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய அதானி குழுமத்துடன் இணைந்து 4 எலக்ட்ரானிக் உற்பத்தி தளங்களை அமைக்க உள்ளது.
4 மாநிலங்கள்
புதிய உற்பத்தி தளங்களை அமைக்கும் பணிகளுக்காகப் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திராபிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
கர்நாடகா
கர்நாடகாவை பார்வையிட்ட ஃபாக்ஸ்கான் இண்டர்நேஷ்னல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர் வின்சென்ட் டாங் வென்-ஹிசின் மற்றும் சீஇஓ கேல்வின் சிச்ச், புதிய உற்பத்தி தளங்கள் அமைக்கும் திட்டத்தில் 5 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய உள்ளோம் எனத் தெரிவித்தார்.
அதிலும் கர்நாடகா மாநிலம் நிறுவனத்திற்கு ஏற்ற சூழ்நிலையில் அமைந்துள்ளதாகக் கூறினார்.
அதானி குழுமம்
இதுக்குறித்து அதானி குழுமத்தின் பிரனவ் அதானி அவர்களிடம் கேட்டபோது எவ்விதமான பதிலும் அளிக்கத் தான் விரும்பவில்லை எனத் தெரிவித்தார். இவர் கௌதம் அதானி அவர்களின் மருமகன் ஆவார்.
2020 இலக்கு
பாக்ஸ்கான் குழுமத்தின் தலைவரான டெர்ரி கோவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், 2020ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் மட்டும் 10-12 பாக்ஸ்கான் நிலையங்களை அமைக்க உள்ளதாக அவர் தெரிவித்தார். இதில் உற்பத்தி நிலையங்கள் மற்றும் டேட்டா சென்டர்களும் அடங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
வாடிக்கையாளர்கள்
தைவான் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டாலும் பாக்ஸ்கான் சீனாவில் மிகப்பெரிய அளவில் மொபைல் உதிரிபாகங்களை உற்பத்தி செய்து வருகிறது.
இந்நிறுவனம் ஆப்பிள், மோட்டோரோலா, ஹுவே, பிளாக்பெர்ரி மற்றும் சோனி ஆகிய நிறுவனங்களும் உதிரிபாகங்களைத் தயாரித்து வருகிறது.
தமிழ்நாடு
இந்தியாவில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் சென்னையில் அமைந்திருந்த நோக்கியா உற்பத்தி ஆலையின் மொபைல் உற்பத்திக்கு ஈடுக்கொடுக்கும் வகையில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் 2010ஆம் ஆண்டு முதல் தொழிற்சாலையைத் துவங்கியது. இதன் பின் தற்போது விரிவாக்க பணிகளில் இறங்கியுள்ளது.