டெல்லி: ஆன்லைன் வருமான வரி தாக்கல் முறையை எளிமையாக்க மத்திய வருமான வரித்துறை தற்போது ஒன் டைம் பாஸ்வோர்டு எனப்படும் ஓடிபி எண்ணை வாடிக்கையாளருக்கு அளிக்கிறது.
இந்த ஓடிபி எண் உங்கள் கணக்கின் விபரங்களை ஆதார் எண் விபரங்களுடன் சரிபார்த்த பின் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.
ஒப்புகை படிவம்
இணையதளம் மூலம் வருமான வரி தாக்கல் செய்யும் வாடிக்கையாளர் தங்களின் ஒப்புகை படிவத்தை வருமான வரித்துறை தபால் மூலம் அனுப்பிவைக்க வேண்டியுள்ளது. இதனால் பலர் தங்களது ஒப்புகை படிவத்தை வருமான வரித்துறைக்கு அனுப்பிவைக்க மறந்துவிடுகின்றனர்.
புதிய முறை..
தற்போது உள்ள முறையை மேம்படுத்தும் நோக்கத்துடனும், எளிமையாக்க வேண்டும் என்று வருமான வரித்துறை புதிய முறையை வடிவமைத்துள்ளது.
விபரங்கள்
இணையதளத்தில் உங்களின் வரி சம்பந்தமான அனைத்து விபரங்களையும் நிரப்பிய பின் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின் உங்களுக்கு ஓடிபி பாஸ்வோர்டு கிடைக்கும்.
ஆதார் டேட்டாபேஸ்
உங்களின் விபரங்களை இணையதளத்தில் சமர்ப்பித்த பின் வருமான வரித்துறை அடுத்த 24 மணிநேரத்தில் ஆதார் டேட்டாபேஸில் பதிவாகியுள்ள உங்களின் தகவல்களை இணையம் மூலமாகவே சரிபார்க்க துவங்கும்.
இப்பணி நிறைவடைந்த உடன் நீங்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணுக்கு வருமான வரித்துறை, ஒன் டைம் பாஸ்வோர்டு அனுப்பி வைக்கும்.
இறுதிக்கட்ட பணிகள்
இதனைக்கொண்டு நீங்கள் வருமான வரித்தாக்கலின் இறுதிக்கட்ட பணிகளை முடிக்க வேண்டும்.
இந்த ஒன் டைம் பாஸ்வோர்டு 24 மணிநேரம் மட்டுமே இயக்கத்தில் இருக்கும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
தபால் முறை தேவையில்லை
இதன் மூலம் உங்கள் ஒப்புகை படிவத்தைத் தபால் மூலம் வருமான வரித்துறைக்கும் அனுப்ப தேவையில்லை. மேலும் உங்களின் வருமான வரியைத் தாக்கல் செய்யக் கடைசி நாள் ஆகஸ்ட் 31ஆம் தேதியாகும்.