பெங்களூரு: இந்தியாவில் அதிகச் சந்தை மதிப்புடைய டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா, இக்குழுமத்தின் நேரடி பொறுப்புகளில் இருந்து விலகிய சில நாட்களிலேயே தனது முதலீட்டு நிறுவனத்தின் மூலம் பல துவக்க (Startup) நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார்.
தற்போது வேகமாக வளர்ந்து வரும் டாக்ஸி நிறுவனமான ஓலா கேப்ஸ் நிறுவனத்தில் தனது தனிப்பட்ட முதலீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.
பவீஷ் அகர்வால்
ஓலா நிறுவனத்தின் தலைவரான பவீஷ் அகர்வால் கூறுகையில், "இந்தியாவின் முக்கியத் தொழில்துறை தலைவர்களில் ஒருவரான ரத்தன் டாடாவின் ஓலா கேப்ஸ் நிறுவனத்தின் பங்கீடு மற்றும் முதலீடு மிகவும் மதிக்கத்தக்கது." என அவர் தெரிவித்தார்.
10 நிறுவனங்கள்
டாடா தனது தனிப்பட்ட முதலீட்டு நிறுவனத்தின் மூலம் ஸ்னாப்டீல், பேடிஎம், அர்பன் லேடர், கார்-தேகோ, சியோமி, கார்யா போன்ற 10 நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.
ஓலா
இந்திய டாக்ஸி நிறுவனமான ஓலா இந்திய சந்தையில் புதிதாய் இறங்கியுள்ள அமெரிக்க நிறுவனமான யுபர் நிறுவனத்துடன் போட்டி போட்டு வருகிறது.
முதலீட்டாளர்கள்
இந்நிறுவனம் இதுவரை 675 மில்லியன் டாலர் வரை நிதி திரட்டியுள்ளது. ஓலா டாக்ஸி நிறுவனத்தில் சாப்ட்பேங்க், டிஎஸ்டி குளோபல், டைகர் குளோபல், ஸ்டீட்வியூ கேபிடல் மற்றும் ஏசெல் பார்னர்ஸ் போன்ற பல நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளது.
டாக்ஸி பார் ஸ்யூர்
கடந்த மார்ச் மாதம் ஓலா கேப்ஸ் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான டாக்ஸி பார் ஸ்யூர் நிறுவனத்தை 200 மில்லியன் டாலர் அதாவது 1,250 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியது.