பெங்களூரு: நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் இன்று தனது 2015-16ஆம் ஆண்டுக்கான முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது.
இன்றைய வர்த்தகம் முழுவதும் சரிவை சந்தித்த டிசிஎஸ் நிறுவனம் 2015ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 25,700 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது. சந்தை ஆய்வுகளின் படி இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் அளவு 25,760 கோடியாகக் கணிக்கப்பட்டுள்ளது.
சந்தை கணிப்புகளை டிசிஎஸ் முடிவுகள் ஈடு செய்யவில்லை என்றாலும் முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம் இல்லை.
பணியாளர்கள் வெளியேற்றம்
டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாளர்கள் வெளியேற்ற அளவு 15.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது இந்நிறுவன வளர்ச்சிக்கு முக்கியத் தடையாக விளங்குகிறது.
நிறுவன வளர்ச்சி
முதல் காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வளர்ச்சி 4.8 சதவீதமாக உள்ளது. ஐடித்துறையின் மொத்த வளர்ச்சி விகிதத்தைப் பார்க்கும் போது டிசிஎஸ் நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது.
மொத்த லாபம்
இந்நிலையில் 2015-16ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த லாபம் அளவு 5,709 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த காலாண்டை ஒப்பிடுகையில் இதன் அளவு 3.3% குறைவு.
ஈவுத்தொகை
இந்நிறுவனப் பங்குதாரர்களுக்கு, டிசிஎஸ் நிர்வாகம் ஈவுத்தொகையாக ஒரு பங்கிற்கு 5.50 ரூபாய் அளித்துள்ளது.
11 புதிய வாடிக்கையாளர்கள்
2015ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனம் 20 மில்லியன் டாலருக்கும் குறைவான மதிப்புள்ள திட்டத்தில் 10 புதிய வாடிக்கையாளர்கள், 50 மில்லியன் டாலர் திட்டத்தில் 1 வாடிக்கையாளரைப் பெற்றுள்ளது.
பணியாளர்கள்
இக்காலத்தில் டிசிஎஸ் நிறுவனம் சுமார் 5,279 பணியாளர்களை நிறுவனத்தில் இணைத்துள்ளது.
பங்குச் சந்தை
இன்றைய வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் பங்குகள் 2.80 சதவீதம் குறைந்து 2,522.50 ரூபாய்க்கு இந்நிறுவனப் பங்குகள் விற்கப்படுகிறது.