பெங்களூரு: இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் புதிதாக ஆன்லைன் மளிகைக் கடை சேவையைத் துவங்கியுள்ளது.
இந்நிலையில் இத்துறையில் பிரத்தியேகமாகச் செயல்படும் பிக் பேஸ்கட் நிறுவனம் பெரிய நிறுவனங்களுடன் போட்டி போடும் விதத்தில் தனது செயல்பாட்டை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
இதற்காகப் பிக் பேஸ்கட் நிறுவனம் 50 மில்லியன் டாலர் ஆதாவது 315 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது. மேலும் அடுத்தச் சில நாட்களில் சிட்டிகுரூப் நிறுவனத்தின் மூலம் 150 மில்லியன் டாலர் நிதி திரட்டும் திட்டத்திற்குப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இப்புதிய நிதி உதவியின் மூலம் இந்நிறுவனம் 50 இரண்டாம் கட்ட நகரங்களில் தனது சேவையை விரிவாக்கம் செய்யப் பிக் பேஸ்கட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த இரண்டு முதலீட்டுக்குப் பின் இந்நிறுவனம் 1 பில்லியன் டாலர் வரை மதிப்பிடப்படும் எனச் சந்தை ஆய்வு நிறுவனங்கள் தெரிவிக்கிறது.
இன்றைய நிலையில் இந்நிறுவனம் 400 மில்லியன் டாலர் வரை மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 2016ஆம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வர்த்தக மதிப்பு 4 மடங்கு அதாவது 400 மில்லியன் டாலர் வரை உயரும் எனத் தெரிவித்துள்ளது.