சென்னை: சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலர் தனது வலிமையைக் கணிசமாக இழந்தாலும், இந்திய சந்தையில் அன்னிய முதலீட்டு அளவு தொடர்ந்து குறைந்து வருவதன் காரணமாகத் திங்கட்கிழமை வர்த்தக முடிவில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 66.69 ரூபாயாகக் குறைந்துள்ளது.
இன்று காலை வர்த்தகம் துவக்கம் முதலே டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 66.49 ரூபாயாகத் துவங்கியது. இது கடந்த செப்டம்பர் 2013ஆம் ஆண்டின் நிலையை எட்டி 2 வருடச் சரிவை பதிவு செய்துள்ளது.
உள்நாட்டுச் சந்தையில் இறக்குமதியாளர்கள் மற்றும் வங்கிகளின் அதிகப்படியான டாலர் தேவை மற்றும் பங்குச்சந்தையில் முதலீடு சரிவு ஆகிய காரணங்களாக ரூபாய் மதிப்பு அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக நாணயச் சந்சை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சீன சந்தையின் வீழ்ச்சி, இந்திய சந்தை மட்டும் அல்லாமல் ஜப்பான், ஹாங்காங், அமெரிக்கா உட்பட அனைத்துச் சந்தைகளையும் பாதித்துள்ளது. குறிப்பாக வளர்ந்து வரும் சந்தைகளை அதிகளவில் பதித்துள்ளது.
இன்றைய பங்குச்சந்தை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 1624.51 புள்ளிகள் வரை சரிந்து 25,741.56 புள்ளிகளை எட்டியது.