சென்னை: வரலாறு காணாத அளவிற்கு இந்திய பங்குச்சந்தையில் இன்று (திங்கட்கிழமை) சென்செக்ஸ் குறியீடு ஓரே நாளில் 1,624 புள்ளிகள் சரிந்து 25,741 புள்ளிகளை எட்டியது.
சீன சந்தையில் உற்பத்தி குறைவு, 547 பில்லியன் டாலர் ஓய்வு தொகையைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் திட்டம் ஆகியவை சீன சந்தையை இன்று அதிகம் பாதித்தது. இதன் எதிரோலியாகவே இந்திய சந்தையில் இன்று 1,624 புள்ளிகள் வரை சரிவைச் சந்தித்தது.
இதனால் சந்தையில் டாப் 30 நிறுவனங்களில் ஒரு நிறுவனம் கூட இன்று லாபத்தைச் சந்திக்க முடியவில்லை. இதனுடன் முதலீட்டாளர்களுக்கு ரூ7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே இன்று நிஃப்டியும் 490 புள்ளிகள் சரிவுடன் 7,809 புள்ளிகளை அடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் ஓஎன்ஜிசி, கெயில், டாடா ஸ்டீல் மற்றும் வேதாந்தா ஆகிய நிறுவனங்கள் இன்று 10 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை சந்தித்தது. ஐடித்துறையில் முன்னணி நிறுவனமான டிசஎஸ், விப்ரோ, இன்போசிஸ் ஆகியவை 3.5 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை எட்டியது.
அதேபோல் வங்கித்துறை பங்கு குறியீட்டில் இன்று 1,245 புள்ளிகள் வரை சரிந்தது. இதனால் நாட்டின் முன்னணி வங்கிப்பங்குகள் அனைத்தும் இன்று அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.
மேலும் இன்றைய நாணய சந்தை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 66.72 ரூபாயாகச் சரிந்து 1 வருடச் சரிவை பதிவு செய்துள்ளது. அதனுடன் பங்குச்சந்தையில் இந்நிலை அடுத்த 1 வாரம் வரை நீடிக்கும் எனச் சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.