பெங்களுரூ: அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கி தனது வட்டி விகித உயர்வினால் வளரும் நாடுகளின் நாணய மதிப்பு மற்றும் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதை உணர்த்தும் வகையில் நாணய கொள்கையை எளிமையாக்க 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிவுறுத்தியது.
இக்காலகட்டத்தில் நாணயச் சந்தையில் அதிகம் பாதிக்கப்படும் நாணயங்கள் பட்டியலில் இந்திய ரூபாய் டாப் 5 இடத்தில் இருந்தது. ஆனால் இப்போது டாப் 10 பட்டியலில் கூட இந்திய ரூபாய் இல்லை. எப்படி??
ரிசர்வ் வங்கி
பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வு இந்திய சந்தையைப் பாதிக்காத வண்ணம் இந்திய ரிசர்வ் வங்கி தனது நாணயக் கொள்கையைத் தொடர்ந்து தளர்த்து வந்தது. இதன் பின்னர் ஆர்பிஐ கவர்னரும் அமெரிக்க வட்டி விகித உயர்வை எதிர்கொள்ள இந்தியா தயார் என்று அறிவித்தார்.
ஆனாலும் டாப் 5 பட்டியலிலேயே இந்திய ரூபாய் இருந்தது.
சீனா யுவான்
சமீபத்தில் சீன அரசு தனது பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தைச் சீர்ப்படுத்த தனது நாணய மதிப்பை 3 சதவீதம் வரை குறைத்தது. இதனால் இந்திய ரூபாய் உட்பட உலகில் பல நாடுகளின் நாணய மதிப்புக் குறைந்தது.
மேலும் நாணய பரிமாற்றச் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் உண்டானது.
டாப் 10
இந்நிலையில் திங்கட்கிழமை நிலவரத்தின் படி நாணய சந்தையில் அமெரிக்க வட்டி உயர்வால் பாதிக்கப்படும் நாணயங்கள் பட்டியலான "டிரபிள் டென்" இல் இந்தியா வெளியேறி ஸ்திரமான இடத்தைப் பிடித்துள்ளது.
இதன் மூலம் அமெரிக்க வட்டி உயர்வால் இந்தியா ரூபாய் பாதிக்காது என நாணயச் சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூபாய் மதிப்புச் சரிவு..
கடந்த ஒரு வாரக் காலத்தில் இந்திய ரூபாய் மதிப்பு அதிகளவில் சரிந்தது நாம் அனைவரும் பார்த்திருப்போம். ஆனால் உண்மையில் வளரும் நாடுகளில் குறைவான பாதிப்பைச் சந்தித்தது இந்திய ரூபாய் தான்.
இன்றைய நாணய மதிப்பு
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 34 பைசா உயர்ந்து 66.30 ரூபாயாக உயர்ந்துள்ளது.