டெல்லி: இந்தியாவில் அதிகளவிலான எண்ணெய் இறக்குமதியைக் கட்டுப்படுத்த மத்திய அரசு சமையல் எண்ணெய் மற்றும் கச்சா எண்ணெய் மீதான இறக்குமதி வரியை சுமார் 5 சதவீதம் உயர்த்தியுள்ளது.
மலேசியா மற்றும் இந்தோனேசியா நாடுகளில் இருந்து செய்யப்படும் அதிகளவிலான இறக்குமதிகளைக் குறைக்கவே மத்திய அரசு இந்தத் திடீர் வரி உயர்வை அறிவித்துள்ளது.
இந்தியாவில் பல எண்ணெய் உற்பத்தி ஆலைகள் முடங்கிப் போனதாலும், விவசாய உற்பத்தி பாதித்துள்ளதாலும், இந்தியாவில் சமையல் எண்ணெய் உற்பத்தி குறைந்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவிற்கு அதிகளவில் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
இதே நிலை தொடர்ந்தால் அடுத்த ஒரு வருடத்தில் சமையல் எண்ணெய் இறக்குமதி சந்தை 40 சதவீதம் உயர்ந்து 14 பில்லியன் டாலராக உயரும். தற்போது இதன் அளவு 10 பில்லியன் டாலராக உள்ளது.
இது தொடர்பாக மத்திய உற்பத்தி வரி மற்றும் சுங்க வரி வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கச்சா மற்றும் சமையல் எண்ணெய் மீதான சுங்க வரி 7.5 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.