டெல்லி: சமீபத்தில் நடந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ஏர்செல் நிறுவனம் கைபற்றிய 2300 மெகா ஹெட்ஸ் 4ஜி அலைக்கற்றை இந்நிறுவனம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
இதனைக் கைப்பற்ற ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனங்கள் போட்டி போட்டு வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தையை ஏர்டெல் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்துடன் ஏற்கனவே துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஏர்டெல் நிறுவனம் இதை மறுத்தாலும், இரு நிறுவனங்களின் உயர் நிர்வாகத் தலைவர்கள் இதுகுறித்த பேச்சுவார்த்தையில் ஈட்டுப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலையில் ஏர்டெல் நிறுவனம் தனது 4ஜி சேவையை இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் இறங்கியுள்ளது. இதனால் கிடைக்கும் இடத்தில் அனைத்து 4ஜி அலைக்கற்றையும் வாங்கத் தயாராகியுள்ளது.
ஆனால் இதற்கு ஸ்பெக்ட்ரம் கட்டுப்பாடுகள் மிகப்பெரிய தடையாக உருமாறியுள்ளது. ஒரு வட்டத்தில் (telecom circle) ஒரு நிறுவனம் மொத்த அலைக்கற்றையில் 25 சதவீதத்திற்கு மேல் வைத்திருக்கக் கூடாது என்பது தான் பிரச்சனை. இதனால் ஏர்டெல் ஒடிசா மற்றும் ஆந்திரா பிரதேசத்தில் சில டீல்களைக் கைவிட்டது.