பெங்களூரு: இந்தியாவில் மிகப்பெரிய காஃபி தொடர் கடைகள் நிறுவனமான கேப் காஃபி டே, அக்டோபர் 14ஆம் தேதி முதல் பங்குச்சந்தையில் ஐபிஓ மூலம் 1,150 கோடி ரூபாய் நிதிதிரட்ட உள்ளது.
இதற்காக இந்நிறுவனத்தின் 17.55 சதவீத பங்குகள் பங்குச்சந்தையில் விற்க சிசிடி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான அனைத்து ஒப்புதல்களும் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி அளித்துள்ளது.
1 பில்லியன் டாலர்
இந்நிலையில் சிசிடி எனச் சுருக்கமாக அழைக்கப்படும் "கேப் காஃபி டே" 1 பில்லியன் டாலர் அளவிற்கு மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கடந்த 3 வருடத்தில் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் சிசிடி மிகப்பெரிய நிறுவனமாகும்.
பங்கு மதிப்பு
இதுகுறித்த கூட்டத்தில் காஃபி டே எண்டர்பிரைசர்ஸ் நிறுவனம் கூறுகையில் இந்நிறுவனத்தின் பங்குகளின் முக மதிப்பு (Face value) 10 ரூபாயாகவும், வர்த்தகப் பங்கு மதிப்பு 316 ரூபாயில் இருந்து 328 ரூபாய் வரையில் இருக்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
காஃபி எஸ்டேட்
இத்தொகையைக் கொண்டு இந்நிறுவனம் கிளைகள் வரிவாக்கம் மற்றும் மேம்பாட்டு, காஃபி எஸ்டேட் போன்றவற்றில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
நிறுவன கடன்
இதற்கு முன் இந்நிறுவனம் வெளியிட அறிக்கையில் பங்குச்சந்தையில் கிடைக்கும் பெரும் பகுதி தொகையை 633 கோடி ரூபாய் கடனை தீர்க்க உபயோகம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தது. ஆனால் தற்போது 296 கோடி ரூபாய் கடனை மட்டுமே தீர்க்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
வங்கி நிறுவனங்கள்
இந்நிறுவனத்தின் பங்கு விற்பனையில் கோட்டாக் மஹிந்திரா, சிட்டி குரூப் குளோபல் மார்கெட்ஸ் மற்றும் மார்கன் ஸ்டான்லி ஆகிய நிறுவனங்கள் ஈடுப்பட உள்ளது.
நிறுவன துவக்கம்
இந்நிறுவனம் பெங்களூரில் 1996ஆம் ஆண்டு முதன் முதலாகத் துவங்கப்பட்டது. தற்போது இந்தியாவின் 209 நகரங்களில் 1,472 கிளைகளைக் கொண்டு இந்நிறுவனம் வர்த்தகம் செய்து வருகிறது.