டெல்லி: செப்டம்பர் மாதம் இந்திய நிறுவனங்களில் ஆட்சேர்ப்பு எண்ணிக்கை சுமார் 18 சதவீதம் அதிகரித்துள்ளதாக நாகூரி நிறுவனத்தின் ஆய்வுகள் தெரிவிக்கிறது.
அதிலும் குறிப்பாக டெலிகாம், பாங்கிங் மற்றும் சாப்ட்வேர் நிறுவனங்களில் அதிகளவிலான பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலை அடுத்தச் சில மாதங்களுக்குத் தொடரும் எனவும் நாகூரி நிறுவனம் கூறுகிறது.
ஜாப் ஸ்பீக் இன்டக்ஸ்
செப்டம்பர் மாதத்திற்கான நாகூரி நிறுவனத்தின் ஜாப் ஸ்பீக் இன்டக்ஸ் 1,796 ஆக உள்ளது. கடந்த வருடத்தை ஒப்பிடும்போது இதன் அளவு சுமார் 18 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் இதன் அளவு 13 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சந்தையில் அதிகளவிலான தேவைகள் குவிந்ததால் நிறுவனங்களில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
முக்கியத் துறைகள்
நாகூரி நிறுவனம் அளித்த தகவலின் படி இந்திய சந்தையில் டெலிகாம், மீடியா மற்றும் பொழுதுபோக்கு, ஐடி, ஐடிஸ், ஆட்டோமொபைல் துறைகளில் ஆட்சேப்பு எண்ணிக்கை நிலையான உயர்வை எட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அதிகளவிலான வளர்ச்சி
மார்கெட்டிங் மற்றும் அட்வர்டைசிங் துறை 27 சதவீதமும், ஐடீஸ்/பிபீஓ துறைகள் 28 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.
நகரங்கள்
ஆட்சேர்ப்பு நடவடிகையில் நகர வாரியாகப் பார்க்கும் போது டெல்லி 29 சதவீத வளர்ச்சியுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, மும்பை, புனே, பெங்களூரு ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது.