டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக விளங்கும் ஏர்டெல், ஆப்பிரிக்க நாடுகளில் இருக்கும் சுமார் 8,300 டெலிகாம் டவர்களை முழுமையாக விற்பனை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
சுனில் மிட்டல் தலைமை வகிக்கும் இந்நிறுவனம் 7 ஆப்பிரிக்க நாடுகளில் இருக்கும் சுமார் 8,300 டெலிகாம் டவர்களை, 1.7 பில்லியன் டாலருக்கு விற்பனை செய்துள்ளது. இத்தொகையைக் கொண்டு இந்நிறுவனத்தின் கடன் அளவுகளை அதிகளவில் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜூன் மாத முடிவில் ஏர்டெல் நிறுவனத்தின் மொத்த கடன் அளவுகள் சுமார் 10.68 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
ஏப்ரல் - ஜூன் மாத காலாண்டில் அறிவித்தபடி டவர் விற்பனையின் மூலம் சுமார் 1.34 பில்லியன் டாலர் கிடைக்கும் என அறிவித்த நிலையில், 243 மில்லியன் டாலர் மட்டுமே பெற்றிருந்தது. தற்போது இதற்கான முழுமையான தொகையை ஏர்டெல் பெற்றுள்ளது.
மேலும் ஆப்பிரிக்கா சந்தையில் டவர் விற்பனை மற்றும் குத்தகை பணிகளை அனைத்து நாடுகளில் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் பார்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள டவர்களையும் கூடிய விரைவில் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் பார்தி ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.