டெல்லி: உலகின் முன்னணி ஆன்லைன் விற்பனை தளமாக விளங்கும் அமேசான், இந்தியாவில் தீபாவளிக்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட தள்ளுபடி விற்பனையில் அதிகளவிலான விற்பனை மற்றும் விற்பனையாளர்களைப் பெற்றுள்ளதால், இந்திய சந்தையில் இந்நிறுவனத்தின் ஸ்திரதன்மை அதிகரித்துள்ளது.
இதனால் அமேசான் நிறுவனம் இந்திய சந்தையில் தொடர் முதலீட்டின் மூலம் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய உள்ளதாகத் திட்டமிட்டுள்ளது என அமேசான் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அமேசான் - பிளிப்கார்ட்
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அமேசான் நிறுவனம் இந்திய சந்தையில் கால்தடம் பதித்துச் சில வருடங்களே ஆன நிலையில், பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு இணையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
விற்பனையில் 4 மடங்கு உயர்வு..!
தீபாவளிக்கு முன்னதான அமேசான் நிறுவனம் அறிவித்த தள்ளுபடி விற்பனையில் இந்நிறுவனத்தின் விற்பனை 4 மடங்கு அதிகரித்துள்ளது என இந்நிறுவனத்தின் உயர் துணை தலைவர் மற்றும் தலைமை நிதியியல் அதிகாரி பிரைன் டி.ஆல்சவஸ்கி தெரிவித்தார்.
விற்பனை மற்றும் விற்பனையாளர்கள்
மேலும் இந்தச் சிறப்புத் தள்ளுபடி விற்பனையின் மூலம் அமேசான் நிறுவனத்தில் வாடிக்கையாளர் மற்றும் விற்பனையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதிலும் ஆக்டீவ் கஸ்டமர்கள் எண்ணிக்கை கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் சுமார் 230 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமும் 40,000 பொருட்கள்
மேலும் தளத்தில் விற்பனையாளர் மூலம் தினமும் சராசரியாகச் சுமார் 40,000 பொருட்களை இணைக்கப்பட்டு உள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதுமட்டும் அல்லாமல் விற்பனையாளர்கள் எண்ணிக்கை, கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 2015ஆம் ஆண்டில் சுமார் 250 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
லாஜிஸ்டிக்ஸ் மற்றும் கிடங்கு
மேலும் அமேசான் நிறுவனத்தில் இணைந்துள்ள விற்பனையாளர்களில் 90 சதவீதம் பேர் இந்நிறுவனத்தின் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் கிடங்கு சேவைகளைப் பயன்படுத்தி வருவதாகவும் அமேசான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால் கிடங்கில் இருப்பு வைக்கப்படும் அளவுகள் சுமார் 3 மடங்கு அதிகரித்துள்ளது.
முதலீடு
இத்தகையைச் சூழ்நிலையில் அமேசான் நிர்வாகம் இந்திய சந்தையில் முதலீட்டைத் தொடர்ந்து அதிகரிப்பதன் மூலம் புதிய சந்தை மற்றும் வர்த்தகத்தைப் பெற்று சந்தை விரிவாக்கம் செய்ய முடியும் எனத் தெரிவித்துள்ளது.
இனி இந்திய சந்தையில் அமேசான் நிறுவனத்தின் முதலீட்டு அளவுகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமாகவே இருக்கும் எனவும் பிரைன் தெரிவித்தார்.
2 பில்லியன் டாலர்
கடந்த வருடம் இந்திய சந்தை வர்த்தகத்திற்காக மட்டும், அமேசான் நிறுவனம் சுமார் 2 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்புகளின் படி அதன் அளவு 3 பில்லியன் டாலர் வரை உயரும் என நம்பப்படுகிறது. ஆனால் நிறுவனத்திடம் இருந்து எந்த விதமான தகவல்களும் அறிவிக்கப்படவில்லை.
ஈகாமர்ஸ் துறை வளர்ச்சி
சந்தை ஆய்வு நிறுவனங்களின் படி 2019ஆம் ஆண்டுக்குள் ஈகாமர்ஸ் துறை வளர்ச்சி 60-70 பில்லியன் டாலர் வரை உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. தற்போது இதன் அளவு 17 பில்லியன் டாலராக உள்ளது.