மும்பை: நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் பல பிரச்சனை மற்றும் நெருக்கடியின் மத்தியில் இந்நிறுவனம் இந்திய சந்தையில் 10 சதவீத லாப உயர்வைப் பதிவு செய்துள்ளது.
இதனால் கடந்த 3 மாதத்தில் மட்டும் ஏர்டெல் நிறுவனம் சுமார் 1,523 கோடி ரூபாய் லாபமாகப் பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் இண்டர்நெட் டேட்டா சேவையில் ஏற்பட்ட திடீர் வளர்ச்சியின் காரணமாக இந்நிறுவனத்தின் லாபம் அதிகரித்துள்ளது.
லாபம்
செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் குறும் செய்தி எனப்படும் மெசேஜ் மற்றும் கால் சேவைகள் சரிவை சந்தித்தாலும், இண்டர்நெட் டேட்டா சேவை அதிகளவிலான உயர்வைச் சந்தித்துள்ளது. இதனால் ஏர்டெல் நிறுவனம் லாபத்தில் அதிகளவிலான உயர்வைச் சந்தித்துள்ளது.
கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் லாப அளவு 1,383 கோடி ரூபாயாக இருந்தது.
ஸ்மார்ட்போன்
ஏர்டெல் நிறுவனத்தின் இண்டர்நெட் டேட்டா சேவையின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் இந்தியாவில் வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை தான்.
மேலும் இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்கள் மட்டும் அல்லாமல் சிறந்த சேவை அளிக்கும் நிறுவனங்களில் ஏர்டெல் முன்னணி நிறுவனமான திகழ்கிறது.
வருவாய்
இக்காலகட்டத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் வருவாய் 4.3 சதவீதம் உயர்ந்து 23,836 கோடியாக உயர்ந்துள்ளது.
மொபைல் டேட்டா வருவாய்
மேலும் இந்நிறுவனத்தின் மொபைல் டேட்டா வருவாய் 49.8 சதவீதம் வரை உயர்ந்து 3,806 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
12 காலாண்டுகளின் மிகப்பெரிய வளர்ச்சி
2015ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டு முடிவில் ஏர்டெல் நிறுவனத்தின் நிகர வளர்ச்சி 13.3 சதவீதமாக உள்ளது. இது கடந்த 12 காலாண்டுகளில் நிகழ்ந்த மிகப்பெரிய வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது எனப் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான கோபால் விட்டல் தெரிவித்தார்.
ஆப்பிரிக்கா வர்த்தகம்
இந்நிறுவனத்தின் ஆப்பிரிக்கா சந்தை வர்த்தகத்தில் சுமார் 5.1 சதவீதம் வரை வளர்ந்துள்ளதாக ஏர்டெல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடன் அளவு
செப்டம்பர் 30 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் மொத்த கடன் அளவு 70,777 கோடி ரூபாயாக உள்ளது.
பங்குச் சந்தை
வாரத்தின் முதல் நாள் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஏர்டெல் நிறுவனப் பங்குகள் 0.15 சதவீதம் சரிந்து 358.60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.