மும்பை: இந்திய விமானப் போக்குவரத்தில் கிங்பிஷர் நிறுவனம் நிலைகுலைந்து தரையைத் தட்டி 3 வருடம் ஆன நிலையில் மற்றொரு தனியார் விமான நிறுவனம் இன்று பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
கிங்பிஷர் நிறுவனத்தின் மீதான முதலீட்டில் கையைச் சுட்டுக்கொண்ட முதலீட்டாளர்கள் தங்களது வடுவை மறைக்க இண்டிகோ நிறுவனத்தின் மீது முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர்.
என்ன காரணம்
இதற்கு முக்கியக் காரணம் சந்தையில் சக போட்டி நிறுவனங்கள் கடன் நிலுவையில் தவித்து நஷ்டத்தை மட்டுமே பதிவு செய்து வரும் நிலையில் இண்டிகோ தொடர்ந்து லாபத்தைப் பதிவு செய்து வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் இந்நிறுவன முதலீட்டின் மூலம் அதிகளவில் முதலீடு செய்யத் தயாராக உள்ளனர்.
இந்நிலையில் இண்டிகோ நிறுவனத்தின் ஐபிஓ பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களை இப்போது பார்ப்போம்.
மிகப்பெரிய தொகை
கடந்த 3 வருடத்தில் இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் அதிகளவிலான நிதியைத் திரட்டும் நிறுவனம் இண்டிகோதான்.
இன்று மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிட்டுள்ள இண்டிகோ நிறுவனம் ஐபிஓ-வின் மூலம் சுமார் 3,018 கோடி ரூபாய் நிதியைத் திரட்ட உள்ளது.
பங்கு விலை
இண்டிகோ நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 700 -765 வரையிலான விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
3,018.2 மோடி ரூபாய்
இண்டிகோ நிறுவனத்தின் ஐபிஓ மூலம் 1,272.2 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளும், ஆஃபர் பார் சேல் முறையில் 1,746 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளும் இன்று பட்டியலிடப்பட்டுள்ளது.
விற்பனை அளவுகள்
கடந்த வாரம் வரை இண்டிகோ நிறுவனம் 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை மட்டுமே விற்பனை செய்யத் திட்டமிட்டது. இதன் பின் இந்நிறுவன தலைவர்கள் ராகேஷ் கங்வால், ஷோபா கங்வால் மற்றும் சின்கர்பூ குடும்பம் ஆகியவை தங்களது பங்கு இருப்பைக் குறைக்க முன்வந்ததால், இதன் அளவு 3018 கோடி ரூபாயாக உயர்ந்தது.
அக்டோபர் 29
வருகிற அக்டோபர் 29ஆம் தேதி இண்டிகோ நிறுவனத்தின் ஐபிஓ முடிவடைகிறது.
கடன் அளவு
இந்த ஐபிஓ மூலம் கிடைக்கும் தொகையில் தனது மொத்த கடன் அளவான 3,912 கோடி ரூபாயில் மூன்றில் ஒரு பங்கு கடனைத் தீர்க்க இண்டிகோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.